தேனி அருகே அமையும் ‘நியூட்ரினோ’ ஆய்வு மையம் : இந்திய அறிவியல் வளர்ச்சியில் தமிழகத்திற்கு தனிப்புகழ்
பண்டைக்காலம் முதலே பல அடிப்படை அறிவியல் அறிவை உலகிற்கு வழங்கிய நாடு இந்தியா. இக்காலத்தில் அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளையும் மற்ற நாடுகளிடம் இருந்து தான் நாம் வாங்க வேண்டுமா? மற்றவர்களுக்கு நமது அறிவை கொடுப்பது எப்போது? "நியூட்ரினோ' என்ற அடிப்படை துகள் பற்றிய ஆய்வு மூலம், அந்த வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.
சமீப காலமாக இயற்பியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் நியூட்ரினோவைப் பற்றிய உண்மைகள் கண்டுபிடிக்கப் பட்டன. அவற்றை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு 2002ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நியூட்ரினோக்கள், அண்டம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல (போட்டான்) எடை (மாஸ்) அற்றவை என கருதப் பட்டது. ஆனால் 1998ம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு என கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் இயற்பியல், விண்வெளி அறிவியலில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூட்ரினோக்கள் பற்றி, இன்னமும் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட உள்ளன. உலக நாடுகளிடையே இதற்காக போட்டியே நிலவுகிறது. இந்த ஆராய்ச்சியில் ஏற்கனவே நமது நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. காஸ்மிக் கதிர்களில் இருந்து உண்டாகும் நியூட்ரினோக்கள், முதன்முதலில் கோலார் தங்க வயல் சுரங்கத்தில், 1965ல் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இச்சுரங்கங்கள், 15 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டு விட்டன. எனவே, மீண்டும் இந்த ஆராய்ச்சியை நடத்துவதற்காக துவக்கப்படுவது தான், "இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடம் (ஐ.என்.ஓ.,)' என்ற திட்டம். இந்தியாவில் உள்ள பல அறிவியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த பாதாள அறிவியல் கூடத்தை அமைக்க முன் வந்துள்ளன. சுமார் 100 விஞ்ஞானிகள், பொறியாளர்கள் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
எப்படி அமைகிறது?: ஐ.என்.ஓ., ஆராய்ச்சிக்கூடம், தேனி மாவட்டம் தேவாரம் அருகே, மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும். அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான "நியூட்ரினோ காணும் கருவி' (டிடெக்டர்) அமைக்கப்படும். இதைச் சுற்றி, நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ., பரிமாணமுள்ள பாறை இருந்தால் தான், ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து, நிறுத்த முடியும். அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும். முதற்கட்டமாக ஐ.என்.ஓ., கூடத்தில், காஸ்மிக் கதிர்கள் உண்டாக்கும் நியூட்ரினோக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப் படும். அடுத்த கட்டம், மிக முக்கியமானது. ஜப்பான், சுவிட்சர் லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதி ஆற்றல் வேக வளர்ச்சி ஆலைகள் (ஹை எனர்ஜி ஆக்சிலரேட்டர்ஸ்) உண்டாக்கும் நியூட்ரினோக்கள், ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவை பூமியின் உள்ளே கடந்து, ஐ.என்.ஓ., கூடத்தை வந்தடையும். அதன் பிறகு, நியூட்ரினோக்கள் பற்றிய ஆராய்ச்சி புதிய உண்மைகளை விளங்க வைக்கும்.
தேனி மாவட்டம் ஏன்?: நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை, கடினமான மலைப் பாறைகளின் கீழே தான் அமைக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள மலைகளைப் போல, இந்தியாவில் எங்கும் இல்லை. இதன் மூலம், அறிவியல் வளர்ச்சியில் தமிழ்நாடு, தனி புகழ் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நமது இளம் விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சி மாணவர்களையும், பொறியாளர்களையும் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்த முடியும். இந்த வாய்ப்பை தமிழகம், இழந்து விடக் கூடாது. ஐ.என்.ஓ., கூடத்தில், எவ்வித ஆபத்தான கதிர் வீச்சு பொருட்களும் பயன்படுத்தப்படமாட்டா. அணுகுண்டு ஆராய்ச்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுற்றுப்புறத்தையோ, நீர், நில வளத்தையோ ஐ.என்.ஓ., ஆராய்ச்சி எவ்விதத்திலும் பாதிக்காது. நியூட்ரினோ கருவி, மற்ற தொலைநோக்கு கருவிகளைப் போன்றது. தமிழகத்தில் இது அமைவதால், மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கு சென்று ஆராய்ச்சிகளை பார்க்க முடியும். அமெரிக்காவும், சீனாவும் மிகப்பெரிய நியூட்ரினோ கூடங்களை அமைக்கின்றன. எவ்விதத்திலும் நாம் பின் தங்கி விடக் கூடாது.






