ஓடத்துவங்கியது சென்னை – திருச்சி மின்சார ரயில் : இந்த ஆண்டு இறுதிக்குள் மதுரை வரை நீடிப்பு
திருச்சி : திருச்சி - விழுப்புரம் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை, மத்திய ரயில்வே இணையமைச்சர் அகமது, நேற்று முறைப்படி துவக்கி வைத்தார். பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த திட்டம் நிறைவேறி உள்ளதால், சென்னை - திருச்சி பாதையில் பயணிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள், மதுரைக்கும் மின்சார ரயில் ஓடும் என, இணை அமைச்சர் அறிவித்துள்ளார்.

திருச்சி - விழுப்புரம் இடையே உள்ள 178 கி.மீ., தூரத்தை மின்மயமாக்கப்பட்ட ரயில்வே பாதையாக மாற்றும் பணி, இரண்டரை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான துவக்க விழா நேற்று காலை திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு தலைமை வகித்தார். தென்னக ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிருஷன் வரவேற்றார். மத்திய ரயில்வே இணையமைச்சர் அகமது, மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்ததோடு, திருச்சியில் இருந்து லால்குடி வரையிலான ரயிலை, கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது: ரயில்வே துறையில் சில ஆண்டாக பல்வேறு முன்னேற்றப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. விழுப்புரம் - திருச்சி இடையே உள்ள 178 கி.மீ., தூரத்தை மின்மய பாதையாக மாற்றும் பணி 2006ல் துவக்கப்பட்டு, இரண்டரை ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், நாள்தோறும் 18 லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்கின்றனர். இவர்களில் 30 சதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழும், 40 சதம் பேர் நடுத்தர வர்க்கத்தினரும் ஆவர். சேவையை மட்டும் குறிவைத்து ரயில்வே துறை இயங்கி வருகிறது. வரும் 2020ம் ஆண்டுக்குள், 33 ஆயிரம் கி.மீ., நீள தடங்களை மின்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தாண்டு 1,238 கி.மீ., தூரத்தை மின்மயமாக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 551 கி.மீ., தூர பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
திருச்சி - மதுரை இடையே மின்மயமாக்கும் பணி, இந்தாண்டு இறுதிக்குள் நிறைவு பெற்று விடும். தற்போது, சமயநல்லூர் வரை ஒயரிங் பணி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரியில் திருச்சி - மதுரை மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்படும். அதே போல் மதுரை - தூத்துக்குடி மின்மயமாக்கும் பணி அடுத்தாண்டு டிசம்பருக்குள் முடிவடையும். விழுப்புரம் - வேலூர் வரையில் ரூ.97.26 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்மயமாக்கும் பணி அடுத்தாண்டு இறுதிக்குள் முடிவடையும். இதுபோன்ற பணிகள் அனைத்தும் நிறைவடையும் போது, 5,146 கி.மீ., நீள தடங்களைக் கொண்ட தென்னக ரயில்வேயில் 2,523 கி.மீ., நீள பாதை மின்மயமாக்கப்பட்டிருக்கும். இவ்வாறு மத்திய இணையமைச்சர் அகமது பேசினார்.
விழுப்புரம் - திருச்சி ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையிலான தபால் தலையை, திருச்சி மண்டல தபால் துறை தலைவர் ராஜலிங்கம் வெளியிட, மத்திய இணையமைச்சர் அகமது பெற்றுக் கொண்டார். விழாவில், திருச்சி எம்.பி., சிவா, மத்திய ரயில்வே மின்மயமாக்கல் பொது மேலாளர் ஜி.ஆர்.விஜ், ரயில்வே போர்டு மின்மயமாக்கல் உறுப்பினர் சுதீஷ்குமார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். திருச்சி - விழுப்புரம் பாதையில் மின் ரயில் ஓடத் துவங்கி உள்ளதை அடுத்து, இனி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள், திருச்சி வரை மின்சார இன்ஜினுடன் பயணிக்கும்.
திருச்சியில் நடந்த மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதை துவக்க விழாவில் பேசிய எம்.பி., சிவா, ""திருச்சியில் இருந்து தஞ்சைக்கு ரயில் கட்டணம் எட்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதே வேளையில், பஸ் கட்டணம் 19 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இரண்டுக்கும் வித்தியாசம் அதிகமாக இருப்பதால் குறைக்க வேண்டும். மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, ""ரயிலில் 32 பெட்டிகள் உள்ளன. இவற்றில் இரண்டு பெட்டியில் பயணம் செய்ய மட்டுமே எட்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மற்ற பெட்டிகளில் பயணிக்க 200, 400 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ரயில்வேயில் மேடு, பள்ளம், திருப்பம் கிடையாது; நமக்கு எல்லாம் உண்டு. இங்கு பேசிய எம்.பி., இதை கர்நாடகாவில் பேசியிருந்தால் பாராட்டி இருப்பேன். ஏனெனில், இதே தூர பயணத்துக்கு அங்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் தான் போக்குவரத்துக் கழகம் கி.மீ.,ருக்கு 28 பைசாவில் பஸ்களை இயக்குகிறது. ரயில்வேயைப் போல் போக்குவரத்துத் துறையும் சேவை துறை தான்,'' என்றார்.






