ஒரு கோடி புத்தகங்கள்; மூன்று மாதங்களில் அச்சிட திட்டம் : தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி
வரும் கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டம் அமலாக உள்ள முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்காக ஒரு கோடி பாடப் புத்தகங்களை அச்சிட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் அச்சிடும் பணிகளை துவக்கி, ஏப்ரல் இறுதிக்குள் முடித்து, மே இரண்டாவது வாரத்திற்குள் பாடநூல் நிறுவன குடோன்களுக்கு அனுப்பிவிட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முக்கியமாக, அரசு நிர்ணயிக்கும் விலையில் தனியார் பள்ளிகள் புத்தகங்களை வழங்கிட, அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. இதன்மூலம், தனியார் பள்ளிகளின் பாடப் புத்தக கொள்ளை முடிவுக்கு வரும்.
பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் புரட்சிகர திட்டமாக, வரும் கல்வியாண்டில் இருந்து சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகிறது. முதல் கட்டமாக, முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பிற்கு, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பொதுவான பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் ஆகிய நான்கு வகையான பள்ளி மாணவர்களுக்கும், வரும் ஜூன் மாதம் முதல் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட இருக்கின்றன.
இதற்காக, 150 ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர், பாடப் புத்தகங்களை எழுதி முடித்துள்ளனர். முழுக்க, முழுக்க வண்ணப் படங்களுடன், மாணவர்களைக் கவரும் வகையில், புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாதிரி பாடப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு, அவை நேற்று முதல்வருக்கு காட்டப்பட்டன.
புத்தகங்களைப் பார்த்த முதல்வர் கருணாநிதி, முழு திருப்தி அடைந்ததாகவும், சிறு, சிறு இலக்கணப் பிழைகளை பார்த்து திருத்தியதாகவும், பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைத்திடும் வகையில், தேவையான முன்னேற்பாடுகளை செய்யவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
சமச்சீர் கல்வி அமலாக உள்ள முதல் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காக ஒரு கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. பிப்ரவரி 10 தேதிக்குப் பின் அச்சிடும் பணியை ஆரம்பித்து, மூன்று மாதங்களுக்குள் முடிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. புத்தகங்கள் அச்சிடப்பட்டதும், மாநிலம் முழுவதும் உள்ள பாடநூல் கழக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை, இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். தனியார் பள்ளிகள், அருகில் உள்ள பாடநூல் கழக குடோன்களுக்குச் சென்று பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஜூன் மாதம் பள்ளி திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்கிட, அரசு ஏற்பாடு செய்துள்ளது.
முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டு மட்டும் பழைய பாடத்திட்டங்களே அமலில் இருக்கும். இதற்கான பாடப் புத்தகங்களை, முன்கூட்டியே பாடநூல் கழகம் அச்சிட்டு வருகிறது.
தனியார் பள்ளிகள், பாடநூல் விற்பனையில் மட்டும் சுளையாக பல ஆயிரம் ரூபாயை கொள்ளை அடித்து வருகின்றன. சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளுக்கும் சேர்த்து அரசே பாடநூல்களை அச்சிட உள்ளது. எனவே, புத்தகங்களுக்கான விலையை, பாடநூல் கழகமே நிர்ணயிக்க உள்ளது. அரசு நிர்ணயிக்கும் விலையிலேயே, மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் புத்தகங்களை வழங்கிடவும், அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
தனியார் பள்ளிகள், தங்களது மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை, பாடநூல்கழக குடோன்களில் இருந்து பெற்று, வினியோகிக்க வேண்டும். மாணவர்களிடம் கூடுதலாக கட்டணங்களை வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.






