அலைக்கழிக்கப்படும் தமிழகம் : ரயில்வே பட்ஜெட்டில் வழக்கம் போல கண்துடைப்பு
தமிழகத்துக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் மகிழ்ச்சி அடைந்தாலும், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரா போன்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, நமக்கு கிடைத்தது "யானைப் பசிக்கு சோளப் பொரி'போட்ட கதையாகவே உள்ளது.
ஒட்டு மொத்த அளவில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 798 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள் ளது. தமிழக மக்களின் மிக நீண்ட கால கோரிக்கையான திண்டுக்கல்-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை திட்டம், இந்த பட்ஜெட்டிலும் கண்டு கொள்ளப்படவில்லை என்பது தான் பெரிய அளவில் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ள புதிய ரயில்வே திட்டங்களிலும் தமிழகத்துக்கு "அல்வா' தரப் பட்டுள்ளது. சென்னை, பெரம்பூரில் இருக்கும் ஐ.சி.எப்., ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையை நவீனப்படுத்துவது, அங்கு மற்றொரு யூனிட் துவங்கப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது, திருவாரூர் ரயில் நிலையத்தை ஆதர்ஷ் ரயில் நிலையமாக மாற்றுவது ஆகிய திட்டங்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால், மற்றபடி சொல்லிக் கொள்ளும்படி வேறு எந்த பெரிய திட்டங்களும் தமிழகத்துக்கு இல்லை.
காரணம் என்ன? இந்தாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பே, ரயில்வே வட்டாரங்கள் சார்பில் சில கருத்துக்கள் வெளியிடப் பட்டன. "தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில், ரயில்வே திட்டங் களுக்கான செலவுத் தொகை முழுவதையும் ரயில்வே துறையே ஏற்பது என்பது சிரமமான காரியம். ரயில்வே திட்டங்களுக்கான செலவில் பாதியை மாநிலங்கள் ஏற்றுக் கொண்டால், அந்த மாநிலத்துக்கு தேவையான பெரும்பாலான திட்டங்களை ரயில்வே நிறைவேற்றும். செலவுத் தொகையை ஏற்கும் மாநிலங்களுக்கு, ரயில்வே பட்ஜெட்டில் முன்னுரிமை அளித்து திட்டங்கள் அறிவிக்கப்படும்' என, அதில் தெரிவிக்கப் பட்டது.
சுதாரித்து சாதித்த கர்நாடகா: ரயில்வே துறையின் இந்த அறிவிப்பை பெரும்பாலான மாநிலங்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் உடனடியாக சுதாரித்துக் கொண் டன. அதிலும், இந்த விஷயத்தில் "கில்லி'யாக செயல் பட்டது, கர்நாடகா தான். அம்மாநில முதல்வர் எடியூரப்பா,"ரயில்வே துறையின் வேண்டுகோளை ஏற்று, மாநிலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ரயில்வே திட்டங்களுக்காக 5,000 கோடி ரூபாயை ஒதுக்குவோம்' என, தடாலடியாக அறிவித்தார். வெறும் அறிவிப்புடன் நின்று விடாமல், முதல்கட்டமாக இதற் காக 300 கோடி ரூபாயும் ஒதுக்கப் பட்டது. அடுத்த சில மாதங்களில் மேலும் 600 கோடி ரூபாய் ஒதுக்கப் போவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கைமேல் பலன்: கர்நாடகா அரசின் இந்த விவேகமான நடவடிக்கை பெரிதும் பலன் அளித்தது. மம்தா பானர்ஜியின் ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்கத்துக்கு அடுத்தபடியாக, கர்நாடகா காட்டில் தான் அடைமழை பெய்தது. புதிய இருப்பு பாதைகள், புதிய ரயில்கள் என, அடுக்கடுக் கான திட்டங்கள் அம்மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, ஆந்திரா மாநில அரசுகளும், தங்கள் மாநிலங்களுக் கான ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ஆகும் செலவில் பாதியை ஏற்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இதன் காரணமாகவே, மம்தாவின் ரயில்வே பட்ஜெட்டில் அந்த மாநிலங்களுக்கும் சலுகை மழை பொழிந் துள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் புதிய ரயில் பாதை, இரட்டை பாதை என 20 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
கொடுத்தால் தான் கிடைக்கும்: திட்டச் செலவுகளை மாநிலங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ரயில்வே துறையின் அறிவிப்பை பொருட்படுத்தாத மாநிலங்கள், பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், "கொடுத்தால் தான் கிடைக்கும்' என்பதை, ரயில்வே அமைச்சகம் மற்ற மாநிலங்களுக்கு புரிய வைத்துள்ளது. வெறும் கோரிக்கை, கடிதங்கள், சந்திப்புகள், வலியுறுத்தல்கள் எல்லாம் இனி வேலைக்கு ஆகாது என்பதை "பளீச்' என, உணர வைத்துள்ளார், மம்தா பானர்ஜி. "வருவாய் இல்லாத, வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்கள் திட்டச் செலவுகளை பகிர்ந்து கொள்ள முடியாது என்பது உண்மை தான். அந்த மாநிலங்களை இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால்,தொழில் துறை வளர்ச்சியால் அதிக வருவாய் பெறும் மாநிலங்களுக்கு திட்டச் செலவுகளை பகிர்ந்து கொள்வதில் என்ன சிக்கல் இருக்கிறது' என, ரயில்வே வட்டாரங்கள் நியாயமான கேள்வியை எழுப்புகின்றன.
புதிய ரயில்களை விட திட்டங்களே அவசியம்: தமிழகத்தை பொறுத்தவரை, புதிய ரயில்கள் அறிவிப்பை விட, புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டங்களே மிகவும் அவசியம். அந்த வகையில், தமிழகத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் எதுவும் இந்த பட்ஜெட் டில் அறிவிக்கப்படவில்லை என்பது மிகப் பெரிய ஏமாற்றம். நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி ரயில் பாதை திட்டம் 2010க்குள்ளும், சேலம்-நாமக்கல், நாகூர்-காரைக்கால் ஆகிய ரயில் பாதைகள் 2010-11க்குள் நிறைவேறும் என்ற அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நீடாமங்கலம்-மன்னார்குடி பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆறு கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள தமிழகத்துக்கு, இவை மட்டும் போதுமானதா? அதேபோல் அகலப் பாதை மாற்றம் தொடர்பான திட்டத்திலும் பெரிய அளவில் தமிழகத்துக்கான அறிவிப்புகள் இல்லை. கடலூர்-சீர்காழி, வேலூர்-விழுப்புரம், தென்காசி-விருதுநகர், திண்டுக்கல்-பழநி வழித் தடங்களை அகலப் பாதையாக மாற்றும் திட்டம் 2011க்குள் முடிவடையும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.
பழசு தான் புதுசாம்: ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு புதிய ரயில்கள் விடப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது. ஆனால், அறிவித்ததில் பாதியைக் கூட இயக்குவது இல்லை. இந்த வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, இயக்கப்படாத ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த இயக்கப்படாத ரயில்கள், புதிய ரயில்களாக ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மீண்டும் அறிவிக்கப்படுகிறது. அதேபோல், இந்தாண்டு பட்ஜெட்டில் மதுரை-கோட்டயம், மதுரை-தூத்துக்குடி, திண்டுக்கல்-குமுளி, ராமேஸ்வரம் -தனுஷ்கோடி ஆகிய நான்கு புதிய திட்டங்கள் ஆய்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த நான்கு திட்டங்களுமே, ஏற்கனவே ஆய்வு செய்து முடிக்கப்பட்டவை. இவற்றை மறுபடியும் ஆய்வு செய்து, பின்னர் அதை திட்டக் கமிஷனின் ஒப்புதலுக்கு அனுப்பி, அதற்கு பின் திட்டத்துக்கான செலவுத் தொகையை ஒதுக்கீடு செய்து, கடைசியாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதெல்லாம், அடுத்த சில ஆண்டுகளில் முடிவடையக் கூடிய விஷயமா? இத்திட்டங்களின் பயன்கள், அடுத்த தலைமுறையினருக்காவது கிடைத்தால் சரி என்ற ஆதங்கம் தான் ஏற்படுகிறது. அதே நேரத்தில் ஏற்கனவே ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப் பட்ட ராமநாதபுரம்-கீழக்கரை-தூத்துக்குடி பாதை, தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த வழித் தடத்தில் தற்போது கிழக்கு கடற்கரை சாலை தயாராகி விட்டதால், ரயில் பாதையும் அமையும் பட்சத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற பின் தங்கிய மாவட்டங்கள் பெரிதும் பயன் அடையும் என்பதை ரயில்வே துறைக்கு யாரும் எடுத்துச் சொல்லவில்லையோ என்ற கவலையும் எழுகிறது.
தொடரும் மீட்டர் கேஜ் அவலம்: மதுரை-போடி இடையேயான மீட்டர் கேஜ் பாதை மட்டுமே, தமிழகத்தில் இன்னும் அகல ரயில் பாதையாக மாற்றப்படாமல் உள்ளது. 167 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்துக்கு, தற்போதைய பட்ஜெட்டில் ஏழு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள் ளது. இந்த ஏழு கோடி ரூபாயை வைத்துக் கொண்டு, எந்த ஒரு சிறிய பணியையும் கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மீட்டர் கேஜ் பாதையின் நினைவாக, இந்த திட்டத்தை விட்டு வைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதோ என்னவோ தெரியவில்லை. அதேபோல், தென்காசி-கொல்லம் இடையேயான மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றப்படுவதற்கான வேலைகள் நடந்து வந்தாலும், இந்த வழித்தடத்தில் செங்கோட்டை-புனலூர் இடையேயான பணிகள் நீண்ட நாட்களாக முடங்கி கிடக்கிறது.
என்ன செய்ய வேண்டும்? ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டுமெனில், அதற்கு மாநில அரசும் ஒரு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். பல்வேறு தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, தமிழகத்தை வளமான மாநிலமாக்குவதற்கு பயன்பட்டாலும், ரயில்வே திட்டங்களும் பெரிய அளவில் நிறைவேற்றப்பட வேண்டும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பயணிகள் போக்குவரத்தையும், சரக்கு போக்குவரத்தையும் எளிதாக்குவதற்கு, போதிய ரயில்வே கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். அதற்காக, குறிப்பிட்ட அளவு செலவை, மத்திய அரசுடன் பகிர்ந்து கொண்டால், நமக்கு தேவையான ரயில்வே திட்டங்கள் அனைத்தையும் எளிதாகவும், விரைவாகவும் பெற்று விட முடியும்.
ரூ. 3,000 கோடி தான் தேவை: தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, வரும் நிதியாண்டுக்கு ஒட்டு மொத்தமாக 3,000 கோடி ரூபாய் தான் தேவை என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது 798 கோடி ரூபாய் மட்டுமே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த திருத்தப்பட்ட பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட குறைவு. கடந்தாண்டில் 890 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது தேவையயான 3,000 கோடி ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை என்று கூறி விட முடியாது. இதில், பாதி தொகையை மாநில அரசு ஒதுக்கினால், மீதமுள்ள தொகையை ரயில்வே ஒதுக்கி விடும். ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதால், நம்மை விட அவர்கள் பல மடங்கு வளர்ச்சி அடையும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.
இலவசத்தை திருப்பி விடலாமே: தமிழகத்தை பொறுத்தவரை, இலவச கலர் "டிவி'க்காக ஆண்டுக்கு 750 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. உணவு மானியத்துக்கு ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதுதவிர, இலவச காஸ், வேட்டி, சேலை என, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகின்றன. இந்த திட்டங்கள், வறுமையில் வாடும் மக்களுக்கு அவசியமானவை தான் என்பதை மறுப்பதற்கு இல்லை. அதே நேரத்தில், ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்கும் கணிசமான அளவில் நிதி ஒதுக்கலாமே என்பது தான், அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டால், தொழில் துறையில் கிடு கிடு வளர்ச்சி ஏற்பட்டு, மாநிலத்தின் பொருளாதார நிலை பல மடங்கு உயர்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம், தமிழக மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும்.
பெரிய திட்டங்கள் இல்லை
* இந்தாண்டுக்கான பட்ஜெட்டில் உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக 10 ரயில் நிலையங்கள் மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று கூட தமிழகத்துக்கு இல்லை.
* சுகாதாரமான தரத்துடன், குறைந்த விலையில் கூடிய குடிநீர் வழங்கும் திட்டத்துக்காக ஆறு ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழக ரயில் நிலையங்கள் இடம் பெறவில்லை.
* நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் அமைக்கப்படவுள்ள பல்முனை சிறப்பு சிகிச்சை மையங்களில் தமிழகத்துக்கு இடம் இல்லை.
* இரட்டை பாதை மாற்றம், அகலப்பாதை மாற்றம் தொடர்பான அறிவிப்புகளிலும் தமிழகத்துக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
* குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஒரிசா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் துறைமுகங்கள், அம்மாநிலங்களின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மிகப் பெரிய துறைமுகங்களை கொண்ட தமிழகத்துக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
* இந்த பட்ஜெட்டில் 19 ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ரயில் பாதை கூட இடம் பெறவில்லை.
சேலம் கோட்டத்துக்கு தொடரும் ஏமாற்றம்: ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டில் சேலம் கோட்டத்தின் கோரிக்கைகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கும் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. ஓசூரில் இருந்து ஓமலூர் வரையிலான 143 கி.மீ., தூரம் ஹூப்ளி கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தமிழக பகுதியை, சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்று நான்கு ஆண்டாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சேலம் கோட்டத்துக்குட்பட்ட கோவை ரயில் நிலையத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு புதிய ரயில்களை இயக்குவது, எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் கோவை வரை மட்டுமே இயக்குவது, சேலம் - விருத்தாசலம் வழித்தடத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பகல் நேர ரயில் இயக்குவது, சேலம் - ஈரோடு வழித்தடத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட பிரதான பகுதிகளுக்கு பயணிகள் ரயில்களை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ரயில்வே பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
தேவையான புதிய ரயில்கள்
* மதுரை-தூத்துக்குடி இடையே பகல் நேர ரயில்.
* கோவை-ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்(ஏற்கனவே மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டது)
* சென்னை எழும்பூர்-திருச்சி இடையே மேலும் ஒரு புதிய எக்ஸ்பிரஸ் ரயில்.
* எழும்பூர்-திருச்செந்தூர் இடையே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் முழுவதும்.
* வேளாங்கண்ணி-காரைக்கால்-திருவாரூர்-தஞ்சை-திருச்சி-திண்டுக்கல்-மதுரை-திருநெல்வேலி-நாகர்கோவில் இடையே தினசரி ரயில்.
* வேளாங்கண்ணி-காரைக்கால்-திருவாரூர்-தஞ்சை-திருச்சி-திண்டுக்கல்-கரூர்-ஈரோடு-திருப்பூர்-கோழிக்கோடு-மகே மற்றும் மலப்புரம் இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில்.






