பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிர்ப்பு வேகம் தணிகிறது: கூட்டணி கட்சிகளுக்கு புது வழி காட்டுகிறார் பவார்
புதுடில்லி : "பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு விவகாரத்தில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம். விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவோம்' என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்க்கும் கூட்டணிக் கட்சிகளின் வேகம் தணியத் துவங்கியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் மற்றும் சுங்க வரி உயர்த்தப்பட்டது. இதனால், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்தது. "இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' என, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் இறங்கியுள்ளன.இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க., ஆகிய கட்சிகளும் விலை உயர்வை எதிர்த்தன. விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என, அந்த கட்சிகள் சார்பில், மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்கத்தில், விலை உயர்வை எதிர்த்து போராட்டமும் நடத்தப்பட்டது. இதனால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்., தலைவரும், மத்திய விவசாய அமைச்சருமான சரத் பவார், இந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்து புதிய வழியை காட்டியிருக்கிறார். விலைவாசி உயர்வில் அவரை எதிர்க்கட்சிகள் விமர்சித்த போது எப்படி நிதியமைச்சர் அவரை ஆதரித்தாரோ அதைவிட தெளிவாக தற்போது பவார் ஆதரிக்கிறார்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:மத்திய அரசில், எங்கள் கட்சியும் அங்கம் வகிக்கிறது. அரசு எடுக்கும் முடிவுகளில் எங்களுக்கும் பங்கு உள்ளது. எனவே, பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் எந்த முடிவையும் தேசியவாத காங்., எடுக்காது. தற்போதுள்ள சூழ்நிலையில்,மத்தியில் நிலையான அரசு அமைவது முக்கியம்.பெட்ரோல் விலை உயர்வுக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, அந்த கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, அவர்களிடம் நிலைமையை விளக்கி, சமாதானம் செய்ய முயற்சிப்போம். நாட்டின் நலன் கருதி, இந்த முடிவை தேசியவாத காங்கிரஸ் எடுத்துள்ளது.மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், ஏராளமான நல்ல விஷயங்கள் உள்ளன.
குறிப்பாக, விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருமான வரி விலக்கு தொடர்பான விஷயத்திலும் நல்ல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கிராமப்புற மேம்பாடு, ஆரம்ப கல்வி போன்றவற்றுக்கும் பயன் தரும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.தற்போதுள்ள சூழ்நிலையில், பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே அனைவரின் நோக்கம். இதற்கு, மத்தியில் நிலையான அரசு அவசியம். நாட்டின் நலன் கருதி இதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு சரத் பவார் கூறியுள்ளார்.
ஏற்கனவே, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவும், தங்கள் கட்சி எதிர்ப்பு போராட்டம் நடத்தியதே தவிர பார்லிமென்ட் விவாதத்தின் போது வெட்டுத் தீர்மானத்திற்கு ஆதரவு அல்லது எதிர்த்து கருத்து தெரிவிக்கப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். தி.மு.க ., சார்பில், முதல்வர் கருணாநிதி, டீசல் விலை குறைப்பை முக்கியமாக வலியுறுத்தி கடிதம் எழுதியிருக்கிறார். அதே சமயம் தமிழகத்தில் புதிய சட்டசபை கட்டடப் பணிகளை பாராட்டி காங்., தலைவர் சோனியாவின் கடிதம் வந்திருக்கிறது.
தவிரவும், இனி பட்ஜெட் குறித்து கமிட்டிகள் ஆலோசனை, அதற்குப் பின் விவாதம் என்று வரும் போது, இடைப்பட்ட நாட்களில் இந்த வேகம் தணிந்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், நிதியமைச்சர் பிரணாபும் நேற்று தனியார் "டிவி'க்கு அளித்த பேட்டியில், "கூட்டணிக் கட்சிகளுக்கு பிரச்னைகளை புரிய வைப்போம், பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறும் முடிவை நான் எடுக்க வாய்ப்பில்லை' என்று கூறியுள்ளார்.ஆகவே, முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., மற்றும் கம்யூனிஸ்ட்கள் தவிர ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த விஷயத்தில் கடுமையான முடிவை எடுக்கும் வாய்ப்புகள் குறையத் துவங்கியுள்ளன.






