பிளஸ் 2 தேர்வு துவங்கியது : 7.5 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
சென்னை : தமிழகத்தில், இன்று துவங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வை, ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்கி, வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வில், ஏழு லட்சம் மாணவர்கள் பள்ளிகளிலிருந்தும், 50 ஆயிரம் மாணவர்கள், தனித்தேர்வர்களாகவும் எழுத உள்ளனர். இதற்கென, தமிழகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கான வினாத்தாள்கள் ஏற்கனவே, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்கள், இன்று காலை, அந்தந்தப் பகுதியில் உள்ள தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.தேர்வு காலை 10 மணிக்கு துவங்குகிறது. மாணவர்கள் பிற்பகல் 1.15 மணிவரை தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.இதில், 10 நிமிடம் வினாத்தாளை படித்துப் பார்க்கவும், அடுத்த ஐந்து நிமிடம், விடைத்தாளில் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை சரி பார்க்கவும், எழுதவும் அளிக்கப்படும். தேர்வின் போது முறைகேடுகளை தடுக்க, தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
காப்பி அடிப்பது, பிட் அடிப்பது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களைப் பிடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன.அசம்பாவிதங்களைத் தவிர்க்க தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கபட உள்ளனர். பொது நுழைவுத் தேர்வு முறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளதால், உயர்கல்வியில் சேர, தாங்கள் எழுதும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டிய நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் "காப்பி அடித்தால்...' : மாணவர்களுக்கு எச்சரிக்கை போஸ்டர் : தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. கோவை மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 926 பேர் தேர்வு எழுதுகின்றனர்."முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, போஸ்டர்கள் மூலம் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று துவங்குகின்றன. பொள்ளாச்சி கல்வி மாவட்டம் இணைந்த கோவை வருவாய் மாவட்டத்தில், 267 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 30 ஆயிரத்து 926 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணிக்க, மாவட்டம் முழுவதும் 75 பேர் கொண்ட, "பறக்கும் படை' அமைக்கப்பட்டுள்ளது.
பார்வையற்றோர், டிஸ்லெக்சியா குறைபாடு, கைகள் ஊனமுற்றோர் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு அறையில் மாணவர்கள் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடக் கூடாது என அச்சிடப்பட்ட போஸ்டர்கள், தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டுள்ளன.அதில், "அனுமதிக்கத்தகாத துண்டுத்தாள், மொபைல் போன் வைத்திருந்தாலோ, வினாத்தாள் அல்லது விடைத்தாளை பரிமாற்றம் செய்தாலோ ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை அல்லது நிரந்தரமாக படிக்கவோ, தேர்வு எழுதவோ தடை விதிக்கப்படும்."மதிப்பெண் சான்றிதழ்கள் ரத்து, நிறுத்தம் செய்வது உள்ளிட்ட தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும். இதன் காரணமாக எதிர்காலமே பாதிக்கப்படலாம் என்பதால், தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட வேண்டாம்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் வினாத்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் கூடுதலாக வழங்கப்படுகிறது.






