மனைவி, குழந்தைகள் கண்முன் கஸ்டம்ஸ் அதிகாரி வெட்டிக்கொலை
சென்னை:மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன், சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரி, மர்ம கும்பலால் நேற்று கொலை செய்யப்பட்டார்.சென்னை, ஆதம்பாக்கம் ஆபீசர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சாம்சன்(43); சென்னை விமான நிலையத்தில் சர்க்கு பிரிவு கஸ்டம்ஸ் அதிகாரி; இவரது மனைவி டெய்சி ஜெயராணி(40); சென்னை துறைமுகத்தில் கஸ்டம்ஸ் பிரிவில் அதிகாரியாக பணிபுரிகிறார்.இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு எரிக்சன்(10) எரிவில்சன்(5) ஆகிய மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் சென்னை அடையாரில் உள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் முறையே நான்காவது மற்றும் முதல் வகுப்பு படிக்கின்றனர்.சாம்சன், சிறுவயது முதலே ஆலந்தூர் என்.எம்.கே., தெருவில் வசித்து வந்தார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், ஆபீசர்ஸ் காலனியில் இடம் வாங்கி, புதிதாக பங்களா கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.
அதே தெருவில் எதிர்வீட்டில் வசிப்பவர் பவுலினா(45). இவர், இப்பகுதியில் சிறிய ஆலயம் அமைத்து நிர்வகித்து வருகிறார். இந்த ஆலய ஆண்டு விழா எடுப்பதற்கு சாம்சன் ஆண்டுதோறும் 5,000 ரூபாய் நன்கொடை கொடுப்பது வழக்கம்.ஆலயத்தின் கணக்கு, வழக்குகளை சரிவர பவுலினா நிர்வகிக்கவில்லை. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சாம்சன் நன்கொடை தரவில்லை.சாம்சன் வீட்டு வேலைக்காரி, தனது வீட்டு முன் குப்பை கொட்டுவதாக பவுலினா பிரச்னை செய்து வந்தார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடப்பது உண்டு. தனது பாதுகாப்பிற்காக வீட்டின் முன் ரகசிய கேமரா (சி.சி.டிவி) பொருத்தி, சாம்சன் கண்காணித்து வந்தார்.இந்த கேமரா, தன்னை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ளதாக புவுலினா தகராறு செய்தார். இதனால், சாம்சனுக்கும் பவுலினாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இத்தகராறு முற்றி, ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசிக் கொண்டனர். பவுலினா மீது சாம்சனும், சாம்சன் மீது பவுலினாவும் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் தலையிட்டனர். சமாதானமாக போவதாக இருவரும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர். தனது ஜாதி பெயரை கூறி பவுலினா திட்டுவதாக மனித உரிமை கழகத்திடம் சாம்சன் புகார் செய்தார். இப்புகாரின்படி மனித உரிமைக் கழகம் விசாரணை நடத்தியதில், அவை உண்மை இல்லை என தெரிந்தது.
ஆனாலும், பவுலினா மற்றும் சாம்சன் இடையே பிரச்னை தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால், சரிவர வேலைக்கு போக முடியாமல் பயமாக இருப்பதாக சாம்சன் மற்றும் அவரது மனைவி டெய்சி ஆகியோர் புறநகர் கமிஷனரிடம் சமீபத்தில் புகார் அளித்தனர்.இந்நிலையில், குடும்பத்துடன் சென்னை கே.கே.நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுவிட்டு சாம்சன் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார். காரை நிறுத்திவிட்டு, காரிலிருந்து கீழே இறங்கிய சாம்சன், வீட்டின் கேட்டை திறக்க முயன்றார்.அப்போது, ஹெல்மெட் அணிந்த 10 பேர் கொண்ட கும்பல், சாம்சனை நோக்கி ஓடி வந்தது. சாம்சன் பயந்து வீட்டிற்குள் ஓடினார். போர்ட்டிகோவில் அவரை மடக்கிய அக்கும்பல், ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில், ரத்தவெள்ளத்தில் சாம்சன் கீழே சரிந்தார். போகும் முன், அவரது காரையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியது.
காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த சாம்சனின் மகன்கள், அவரது மனைவி ஆகியோர் மீது நொறுங்கிய கண்ணாடி துகள்கள் சிதறின. ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த சாம்சனை ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜு, உதவி கமிஷனர்கள் சங்கரபாண்டியன், குப்புசாமி, இன்ஸ்பெக்டர்கள் பழனிவேல், சந்திரசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். சாம்சனின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவுப்படி, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார், மீனம்பாக்கம், ஆதம்பாக்கம், நெற்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் இரவு முழுவதும் தீவிரமாக தேடினர். மனைவி, கண்முன், கணவன் படுகொலை செய்த சம்பவத்தால் ஆதம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாம்சன் கொலை வழக்கு:கோர்ட்டில் 9 பேர் சரண்: கொலை செய்த மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள், தங்களை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக ஹெல்மெட்களை அணிந்திருந்தனர். கொலையாளிகளை நள்ளிரவே பிடிக்க புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார்.போலீசார் தேடுவதையறிந்த, பவுலினாவின் மகன்கள் அப்பு(எ) இளையராஜா, சின்ன அப்பு (எ) மணிகண்டன் மற்றும் லட்சுமணன், நாகூர், வினோத், கனி, பிரசன்னகுமார், கோபி, ராஜகோபால் ஆகியோர் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று காலை சரணடைந்தனர்.இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் பவுலினா மற்றும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
யார் இந்த பவுலினா?:ஆதம்பாக்கம் ஆபீசர்ஸ் காலனியில் வசித்த கஸ்டம்ஸ் அதிகாரி சாம்சன் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிப்பவர் பவுலினா(50). இவர், சினிமாவில் சிறிய வேடத்தில் நடித்ததாக கூறப்படுகிறது. அதன் பின் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.விபசார வழக்கில் கைதான பவுலினா, பொது இடங்களில் அடிதடியில் ஈடுபட்ட வழக்கு, போலீஸ்காரர்களை தாக்கிய வழக்கு, சாராயம் மற்றும் கஞ்சா விற்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.பவுலினாவின் மகன் இளையராஜா, கார்கோவில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். பவுலினா - சாம்சன் தகராறில் தனது மகன் இளையராஜாவை வேலை செய்ய விடாமல் சாம்சன் டார்ச்சர் செய்ததாக பவுலினாவுக்கு தெரிந்தது. இதனால், மகன்களை வைத்தே கஸ்டம்ஸ் அதிகாரி சாம்சனை கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.






