வாய்க்காலில் மேலும் இரு மாணவர்களின் உடல்கள் மீட்பு : சிதம்பரம் பல்கலையில் பதட்டம் நீடிப்பு
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் ஏற்பட்ட ரகளையில் போலீசார் விரட்டியதால் ஆற்றில் குதித்து இறந்த மேலும் இரு வட மாநில மாணவர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. பதட்டம் தொடர்வதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்த ஜார்க்கண்ட் மாநில மாணவர் கவுதம்குமார்(20), கடந்த 28ம் தேதி விபத்தில் சிக்கி காயமடைந்தார். அண்ணாமலை பல்கலை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இறந்தார். ஆத்திரமடைந்த வெளி மாநில மாணவர்கள் 500 பேர், 1ம் தேதி நள்ளிரவில் துணைவேந்தர் மாளிகை முன் திரண்டனர். தேர்வுத்துறை அலுவலகம், மருத்துவமனை கட்டட கண்ணாடிகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கினர். ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். போலீசுக்கு பயந்து ஓடிய மாணவர்கள், முத்தையா நகர் செல்லும் வழியில் உள்ள பாலமான் வாய்க்காலில் குதித்தனர். ஒருவர் மீது ஒருவர் குதித்ததில் ஜார்க்கண்ட் மாநில மாணவர் சுமித்குமார்(22), தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதனால் பதட்டம் அதிகரித்தது.
வடக்கு மண்டல ஐ.ஜி., துரைராஜ் தலைமையில் டி.ஐ.ஜி.,க்கள் விழுப்புரம் மாசானமுத்து, காஞ்சிபுரம் ராமசுப்ரமணியன், ஐந்து எஸ்.பி.,க்கள், 25 டி.எஸ்.பி.,க்கள் மற்றும் ஆயிரம் போலீசார் அண்ணாமலை பல்கலை மற்றும் சிதம்பரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் விரட்டியபோது, வாய்க்காலில் குதித்த மாணவர்களில் இருவரை காணவில்லை என, சக மாணவர்கள் கூறியதால், நேற்று முன்தினம் காலை முதல் தீயணைப்புப் படையினர் தண்ணீரில் இறங்கி தேடினர். ஆகாயத்தாமரை செடியில் சிக்கி இறந்த இரு மாணவர்களின் உடல்கள் நேற்று காலை கிடைத்தன. அவர்கள், பீகார் மாநிலம் பாட்னா சம்புரா பகுதியைச் சேர்ந்த மேட்லூக் ராப் மகன் முகமது சர்பரேஸ் ராப்(22) நலந்தரா மாவட்டம் லோக்ராட், டனக்கரா பகுதியைச் சேர்ந்த சுவிந்தரகுமார் மகன் ஆஷிஷ் ரஞ்சன்குமார் (20) என்பது தெரிந்தது. இருவருமே இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு மாணவர்கள். ஆஷிஷ் ரஞ்சன்குமாரின் தந்தை சுவிந்திரகுமார், பாட்னா ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இறந்த மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு இருவரது உடல்களும் கொண்டு செல்லப்பட்டன.
நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட மாணவர் சுமித்குமார் உடல், சிதம்பரம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ள நிலையில், மருத்துவமனை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடலூர் அரசு மருத்துவமனையில் விழுப்புரம் எஸ்.பி., பகலவன் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரச்னை ஏற்படாமல் இருக்க இன்ஜினியரிங் கல்லூரிக்கு மட்டும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், நேற்று மருத்துவம் தவிர்த்து அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது.
உள்துறை செயலரிடம் துணைவேந்தர் விளக்கம்: பீகார் மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது குறித்து, அம்மாநில உள்துறை செயலரிடம் விளக்கம் அளித்துள்ளதாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் ராமநாதன் கூறினார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பல்கலையில் மாணவர்கள் இறந்தது வருத்தமான சம்பவம். மாணவர்கள் இறந்ததையொட்டி மருத்துவம், தொலைதூர கல்வி தவிர மற்ற அனைத்திற்கும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. பீகார் மாணவர்கள் இறந்தது குறித்து அம்மாநில உள்துறை செயலரும், டி.ஜி.பி.,யும் என்னிடம் தொலைபேசியில் பேசினர். நடந்த சம்பவம் முழுவதையும் தெரிவித்தேன். விபத்தில் இறந்த மாணவர்கள் அனைவருமே வெளியில் தங்கியிருந்தவர்கள். பல்கலையில் படிக்கும் வெளியூர் மாணவர்கள் 27 ஆயிரம் பேரில், 14 ஆயிரம் மாணவர்கள், விடுதியில் தங்கி படிக்கின்றனர். அனைத்து மாணவர்களும் தங்குவதற்காக விடுதி கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் வெளியில் தங்காத அளவில் விடுதி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுவிடும். இவ்வாறு ராமநாதன் கூறினார்.
விசாரணை நடத்த அதிகாரி நியமனம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் இறந்த சம்பவம் குறித்து விசாரிக்க, கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜனை, விசாரணை அதிகாரியாக நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையின் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த வெளிமாநில மாணவர் கவுதம் குமார், சில தினங்களுக்கு முன் நடந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக, பல்கலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அதன்பின், சிகிச்சை பலனின்றி கவுதம்குமார் இறந்தார். அவருக்கு, பல்கலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, வெளிமாநில மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை ஒடுக்க போலீசார் சென்றபோது, மாணவர்கள் பயந்து ஓடினர். அப்போது, பல்கலை வளாகத்திற்கு அருகில் உள்ள பாலமன் வாய்க்காலில் மாணவர்கள் குதித்தனர். அதில், ஒரு மாணவர் நீரில் மூழ்கி இறந்தார். இந்நிலையில், இதே வாய்க்காலில் நேற்று இரு மாணவர்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இதனால், அங்கு பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜனை விசாரணை அதிகாரியாக நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார். அதனடிப்படையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.






