மதுரையில் சினிமா பாணியில் மாணவர்கள் நடத்திய கொலை
மதுரை : மதுரையில் சினிமா பாணியில், வாழைத்தார் வியாபாரியை, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கொலை செய்தது, போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (29). கீழமாரட் வீதி தயிர் மார்க்கெட்டில், வாழைத்தார் வியாபாரம் செய்தார். பிப்.,25 இரவு ஓபுளா படித்துறை தரைப்பாலத்தில், இவரை ஏழு பேர் கொண்ட கும்பல், மிளகாய் பொடி தூவி, வெட்டிக் கொலை செய்தது. மதிச்சியத்தைச் சேர்ந்த அருண் என்பவர், தனது சகோதரியிடம் காளிமுத்து தொடர்பு வைத்திருந்ததால், நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிந்தது. இவ்வழக்கில் அருண், மணி (டிரை சைக்கிள் ஓட்டுபவர்) ஆகியோர், நேற்று முன் தினம் அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு மணி, சதீஷ், சுரேஷ், ஆனந்த், மற்றொரு சதீஷ் ஆகியோரை விளக்குத்தூண் போலீசார் தேடி வருகின்றனர்.
சினிமா ஸ்டைலில் கொலை: இவர்களில், சதீஷ், மணி, ஆனந்த் ஆகியோர் மாநகராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கின்றனர். இவர்களுக்கு அருண் பழக்கமானார். அடிக்கடி சேர்ந்து படம் பார்த்துள்ளனர். "காளிமுத்துவை தீர்த்துக் கட்ட வேண்டும்' என, நண்பர்களிடம் அருண் கூறினார். "ரேணிகுண்டா' படத்தில் வரும் காட்சியைப் போல் கொலை செய்ய முடிவு செய்தனர். பிப்.,25 இரவு ஓபுளா படித்துறை தரைபாலத்தில் காத்திருந்தனர். அவ்வழியே சைக்கிளில் வந்த காளிமுத்துவிடம் சதீஷ் "லிப்ட்' கேட்டு பின்புறம் ஏறிக்கொண்டார். சில அடி தூரத்தில், காளிமுத்து முகத்தில் மிளகாய் பொடி தூவினார். பின் அவரை கீழே தள்ளி, கழுத்தை திருகி, அதன் மேல் சதீஷ் அமர்ந்தார். பின், அனைவரும் காளிமுத்துவை வெட்டி தலைமறைவாயினர். போலீசார் கூறுகையில், "சினிமாவை பார்த்து மாணவர்கள் வாழ்க்கையில் தடம் மாறியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இதுதான் முதல் குற்றம். சிறுவயதிலிருந்தே நல்வழிப்படுத்தாத பெற்றோரும் இதற்கு காரணம்' என்றனர்.







அதான் மதுரை காரங்கனாலே எல்லா ஊர்லையும் பயப்படுறாங்க