இளைஞர்களை சீரழிக்கும் பாலியல் தொழிலாளர்கள்: தொழில் முன்னேற்றத்தால் கலாசார சீர்கேடு
மதுரை : தொழிற்துறை முன்னேற்றம் மற்றும் பெற்றோர்களின் கண்காணிப்பு இன்மையால் இளைஞர்கள், பாலியல் தொழிலாளர்களை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவர்கள் இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அவை வருமாறு: மதுரையில் 15 முதல் 48 வயதுக்கு உட்பட்ட பாலியல் தொழிலில் ஈடுபடும் 6000 பெண்களும், நடுத்தர, கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். மேல்தட்டு பாலியல் தொழிலாளர்களை கண்டறிவது கடினமாக உள்ளது. இப்பெண்களில் பெரும்பாலானோர் இளம் விதவைகள், கணவனைப் விட்டு பிரிந்தவர்கள், மணவாழ்க்கை பாதிக்கப்பட்டோர் தான் அதிகம். வீட்டுவேலை செய்யும் பெண்கள் 15 வயதில், அங்குள்ள வீட்டுக்காரர்களால் பலாத்காரத்திற்கு உட்பட்டதே முதல் காரணமாக உள்ளது. அங்கு கிடைக்கும் குறைந்தபட்ச சம்பளம், வெளியில் கிடைக்காது என்ற அவநம்பிக்கையில், இக்கொடுமையை வெளியில் சொல்வதில்லை. "டீன் ஏஜ்' பருவத்தில் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களால் முதன்முதலில் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள், பெற்றோரின் கவனிப்புக்கு பிறகு அதிலிருந்து மீள்கின்றனர். சில பெண்கள் "லிம்போமேனியா' ( செக்ஸில் அதிக ஆர்வம்) பிரச்னையால், பணத்துக்காகவும், சுயத்தேவைக்காகவும் விரும்பி பாலியல் தொழில் செய்கின்றனர்.
பெரும்பாலும் உடல் கவர்ச்சி தீர்ந்தபின்பே, தொழிலில் இருந்து விடுபடுகின்றனர். அதிகபட்சமாக 50 வயது பெண்ணும் பாலியல் தொழிலில் நாட்டமுடன் உள்ளனர் என ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதிலும் அப்பெண் கல்லூரி இளைஞர்களை மட்டுமே விரும்புகிறார் என்பது அதிர்ச்சியான விஷயம். பஸ் ஸ்டாப், ரயில்வே ஸ்டேஷன்களில் இரவு நேரத்தில் தனியாக நிற்கும் பெண்களை, பாலியல் தொழிலாளர்களாக சித்தரிக்கும் நிலை இன்றும் உள்ளது. இதனால் குடும்பப் பெண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, குடியிருக்கும் வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாடிக்கையாளர்களை அழைப்பதில்லை. கே.கே. நகர் பகுதியில் உள்ள பாலியல் தொழிலாளர், ஆரப்பாளையம் பகுதியில் உள்ள வேறொரு பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கு, விருந்தினராக சென்று தொழிலில் ஈடுபடுகிறார். அழகான பெண்களுக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் இருப்பதால் லாட்ஜ், சுற்றுலாத்தலம், யாருமில்லாத நேரத்தில் வீட்டுக்கு அழைத்துச் செல்வதென உள்ளனர். மற்ற பெண்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனைச் சுற்றியுள்ள வசதியில்லாத, மறைவான பகுதிகளில், வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றனர். இளம்பெண் ஒருவருக்கு இதனாலேயே முதுகில் அதிக காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
என்ன காரணம்: பாலியல் தொழில் பெருகியதற்கு காரணம் தொழிற்துறை அதிகரிப்பு தான். படித்த இளைஞர்கள், வேலைக்காக வெளியூர் சென்று, தனியாக அறை எடுத்து தங்குவதும், பெற்றோர் கண்காணிப்பு இல்லாததும் தான் காரணம். வீட்டை விட்டு வந்ததும், பழைய கட்டுப்பாடுகளை தகர்த்து விடுகின்றனர். இளம்பெண்கள் 18 வயது வரை வேலைக்கு செல்லாத அளவுக்கு, அக்குடும்பம் பொருளாதார ஏற்றம் பெற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள், துணிந்து பிரச்னைகளை வெளியில் சொல்ல வேண்டும். வீட்டில் நல்லொழுக்கங்களையும், பாலியல் கல்வியையும் சரியான விதத்தில் கற்றுத்தரவேண்டும். பாலியல் தொழிலாளர்களை மட்டும் தண்டிக்காமல், அதில் ஈடுபடும் ஆண்களையும் தண்டிக்கும் வகையில் சட்டம் இருக்க வேண்டும். அப்போது தான் கலாசார சீர்கேடு குறையும் என, மாணவர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.






