நடிகையுடன் நித்தியானந்தா : ஆசிரமம் சூறை ; திட்டமிட்ட சதி என்கிறது ஆசிரம வட்டாரம்
சென்னை: தமிழ் நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து ஆசிரம வட்டாரம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியுள்ளனர். திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் தலைமையகம்.
32 வயதே நிரம்பிய நித்தியானந்தா, கதவை திற காற்று வரும் என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பக்தர்களை பெரும் கடுப்பேற்றியுள்ளது.
பெங்களூரு: பெங்களூருலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் பிடுதி என்னும் ஊரில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் நித்யானந்தர் ஆசிரமம் அமைந்துள்ளது. நேற்று காலை 9 மணியளவில் ஜெய் கர்நாடகா அமைப்பினர் 100 பேரும், பிரவீன் குமார் ஷெட்டியின் ரக்ஷன வேதிகே அமைப்பினர் 15 பேரும் ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்களை ஆசிரமத்திற்குள் நுழைய போலீசார் அனுமதிக்க வில்லை. ஆசிரமத்தின் பின் பக்கம் வழியாக உள்ளே நுழைந்தனர். வாசல் பகுதியில் இருந்த நித்யானந்தரின் பேனர்கள், படங்களை கிழித்தெறிந்தனர். அப்பகுதியில் இருந்த கண்ணாடி கூண்டிலான போலீஸ் அவுட் போஸ்ட்டை அடித்து நொறுக்கினர். அந்த இடத்தில் போலீசார் அதிகமாக இருந்ததால், அதற்கு மேல் யாரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இரண்டு மணி நேரம் அங்கிருந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, நித்யானந்தர் படத்திற்கு செருப்பு மாலைகளை அணிவித்தும், செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். ஆசிரம காம்பவுண்ட் சுவர் அருகிலுள்ள ஆசிரம குடிசைகள் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் நான்கு குடிசைகளும், அப்பகுதியிலுள்ள மரங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. தீப்பிடித்து எரிந்த குடிசை வீடுகளில் எரிந்த நிலையில் படுக்கைகள் காணப்பட்டன. ஒவ்வொரு குடிசையிலும் இதுபோன்ற படுக்கைகள் எரிந்து சாம்பலாகியிருந்தது. தீப்பிடித்த பகுதிகளில் பாம்புகள் கருகிக் கிடந்தது தெரியவந்தது.
சேலம்: சேலத்தில், நித்யானந்தாவுக்கு எதிராக சட்டக்கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர அமைப்பாளர் பிரவீண் குமார் தலைமையில் பெரியபுத்தூர் பகுதியில் உள்ள நித்யானந்தா தியான மடத்துக்கு 15க்கும் மேற்பட்டவர்கள் நேற்று சென்றனர். தியான மடத்தின் போர்டை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உடைத்து நொறுக்கினர். மடத்துக்குள் புக முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் அங்கு மக்கள் திரளாக வரத்துவங்கினர். அதனால், அங்கு அசம்பாவிதம் ஏற்படும் என்ற பீதியில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் அங்கிருந்த கூட்டத்தினரை கலைந்து செல்லுமாறு கூறி கலைத்தனர். அப்போது, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் சிவபாபு அங்கு வந்து ஆசிரமத்தை மூடிவிட்டு, "ஆசிரமத்துக்குள் இருப்பவர்கள் அனைவரும் வெளியே செல்லுங்கள்' என கூறி கூச்சலிட்டார். போலீசார் அவரை மடக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பின், அவரை பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி கைது செய்தனர்.
நித்யானந்த மடம் சார்பில் திடீர் விளக்கம்: மிகுந்த பரபரப்புக்கு இடையில் ஆஸ்ரமத்தில் இருந்த நித்ய சத்யானந்த சுவாமிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தியான பீடத்தின் முகவரியோ, யாருடைய கையெழுத்தும் இல்லாமலே இந்த அறிக்கை இடம் பெற்றிருந்தது. மார்ச் 2ம் தேதி இரவில் வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இந்த காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு, திட்டமிட்டு சதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும். இந்த நேரத்தில் நாங்கள் பக்தர்களுக்கும், அபிமானிகளுக்கும் எங்களின் நிலைமையை தெளிவாக கூறுகிறோம். இதனால், மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளோம். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
பொது வாழ்க்கையில் ஏழு ஆண்டுகளாக நித்யானந்த சுவாமிகள், பல சேவைகளை செய்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து 20 லட்சம் பக்தர்கள், நித்யானந்த சுவாமிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். வாழ்க்கையின் தத்துவம் குறித்து பல்வேறு நாடுகளில் சுவாமிகள் விளக்கியுள்ளார். இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளனர்.






