நித்யானந்தா ‘சிடி’ ஆதாரம் போலீசில் தாக்கல் : வழக்கு விசாரணை பெங்களூருக்கு மாற்றம்
சென்னை : ""நித்யானந்தா வீடியோ காட்சியை எடுத்த அவரது சீடர் ஸ்ரீநித்ய தர்மானந்தா, சாமியாருக்கு எதிராக கொடுத்துள்ள புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் கர்நாடகாவில் நடந்திருப்பதால், இவ்வழக்கு கர்நாடக போலீசாருக்கு மாற்றப்படுகிறது,'' என சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
நித்யானந்தா, பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் இருக்கும் காட்சி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகள் எப்படி வெளியானது; வீடியோவை எடுத்தது யார் என பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில், நித்யானந்தா படுக்கையறை காட்சிகளை எடுத்தது, அவரது சீடர்களில் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது. சேலம் ஆத்தூரைச் சேர்ந்த ஸ்ரீநித்ய தர்மானந்தா என்ற லெனின், பெங்களூரு நித்யானந்தா ஞானபீடத்தில் சீடராக உள்ளார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
அப்புகாரில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2004ம் ஆண்டு நித்யானந்தா மீது பக்தி ஏற்பட்டு, 2006ம் ஆண்டு முதல் பெங்களூரு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சேவை செய்து வருகிறேன். ஆசிரமத்திற்கு வரும் அழகான அப்பாவி பெண்களிடம், தான் கிருஷ்ணர் அவதாரம் என நித்யானந்தா கூறி, அவர்களை கோபியர் எனக் கூறி கட்டிப் பிடிப்பார். அவரால் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட சிலர், ஆசிரமத்தை விட்டு வெளியேறினர். ஆசிரமத்தில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்ததுடன், ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். குறிப்பாக, நடிகை ரஞ்சிதாவிடம் நித்யானந்தா அடிக்கடி உல்லாசமாக இருப்பதைக் கண்டு, என் வாழ்க்கை பாழாக்கப்பட்டதை உணர்ந்தேன். நித்யானந்தா, லட்சக்கணக்கான பக்தர்களையும், சீடர்களையும் ஏமாற்றும் செயலை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், கடந்த ஆண்டு டிசம்பரில் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்ததை ரகசியமாக படம் எடுத்தேன்.
இதை அறிந்து, பிப்ரவரி 18, 19ம் தேதிகளில் சேலம், சீரகப்பாடியில் புதிய ஆசிரம திறப்பு விழாவிற்கு சென்றபோது, நித்யானந்தா தனது வேனுக்குள் அழைத்தார். அங்கு, "படம் ஏதாவது எடுத்தாயா? கொலை செய்து விடுவேன்' எனக் கூறி, அவரும், அவரது சீடர்களும் மிரட்டினர். அவர்களிடம் கழிவறைக்கு செல்வதாகக் கூறி, அங்கிருந்து தப்பி வந்து விட்டேன். நித்யானந்தாவை நம்பியுள்ள அப்பாவி இந்துக்களையும், இந்து மக்களையும் அவரிடமிருந்து காப்பாற்ற, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தர்மானந்தா புகாரில் கூறியுள்ளார். நித்யானந்தாவின் படுக்கையறை காட்சிகள் அடங்கிய ஒரு "சிடி'யையும் போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: நித்யானந்தாவின் சீடர் ஸ்ரீநித்ய தர்மானந்தா என்ற லெனின், என்னிடம் நேரில் ஒரு புகார் அளித்தார். ஆசிரமத்தில் சில விஷயங்கள் நடந்ததாகவும், அதை வெளியே கொண்டு வர வீடியோ எடுத்ததாகவும், இதனால் தனக்கு மிரட்டல் வருவதாகவும் கூறினார். இவ்வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பான அனைத்து சம்பவங்களும், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்துள்ளது. எனவே, இவ்வழக்கை கர்நாடக போலீசாருக்கு மாற்றும்படி, தமிழக டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதவுள்ளேன். தமிழக டி.ஜி.பி.,யும் இவ்வழக்கை கர்நாடகாவிற்கு மாற்றுவது தொடர்பாக, கர்நாடக டி.ஜி.பி.,யுடன் பேசியுள்ளார். வழக்கு, வரும் திங்கள் கிழமை கர்நாடக போலீசாருக்கு மாற்றப்படும். வழக்கு விசாரணை தொடர்பாக, கர்நாடக போலீசாருக்கு தேவைப்படும் உதவிகள் அனைத் தையும் தமிழக போலீசார் செய்வர்.
தர்மானந்தா கொடுத்த, "சிடி' இரண்டு மணி நேரம் ஓடுகிறது. அந்த வீடியோவில் இருப்பது நித்யானந்தாவா அல்லது கிராபிக்ஸ் காட்சிகளா என்பது குறித்து, கர்நாடக போலீசார் விசாரணை நடத்துவர். படுக்கையறை காட்சியை வீடியோவாக எடுத்த தர்மானந்தா மீது வழக்கு தொடர்வது குறித்தும் கர்நாடக போலீசார் விசாரிப்பர். ஆசிரமத்தில் கனடாவைச் சேர்ந்த ஒருவர் மர்மமான முறையில் இறந்ததாகவும், மேலும் மூன்று பேர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் தர்மானந்தா கூறினார். அப்புகார் குறித்தும் கர்நாடக போலீசார் விசாரிப்பர். சாமியார் நித்யானந்தாவிற்கு எதிராக இதுவரை இரண்டு புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு ராஜேந்திரன் கூறினார். இவ்வழக்கில் தனிப்படை அமைத்து, நித்யானந்தாவை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
காந்தப் படுக்கை மோசடியில் தர்மானந்தா: நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின், ஏற்கனவே, காந்தப் படுக்கை மோசடியில் சிக்கியவர். ஆத்தூரை சேர்ந்த லெனின், அழகாபுரத்தில் வசித்து வந்தார். இவர், காந்தப் படுக்கை விற்பனை செய்து வந்தார். ஒரு காந்தப்படுக்கை விலை 12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. காந்தப் படுக்கையில் "உறவு' கொண்டால், உணர்வுகளை அதீதமாக தூண்டி விடும் என, பொய் பிரசாரம் செய்யப்பட்டது. அதை நம்பி, காந்தப்படுக்கையை வாங்கிய ஏமாந்த தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் போலீசில் அடுக்கடுக்காக புகார் அளித்தனர்.
இப்பிரச்னை, தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, லெனின் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சில காலம், வேறு தொழில் எதுவும் செய்யாமல் லெனின், வீட்டில் இருந்து வந்தார். நித்யானந்தாவின் புகழ் பரவிய நிலையில், அவரை சேலத்துக்கு அழைத்து வந்தார். ஆன்மிக வழியில் தன்னை தயார் படுத்தி கொண்ட லெனின், தன் பெயரை தர்மானந்தா என மாற்றி கொண்டு, நித்யானந்தாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக விளங்கி வந்தார். தற்போது, "சிடி' பிரச்னையில் சிக்கியுள்ளதால், நித்யானந்தா தரப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.






