ஸ்டாலின், அழகிரியால் பலம்பெறும் ஆளுங்கட்சி : புதிய அணுகுமுறை, நாகரிக நடைமுறை
முன்பெல்லாம் திராவிட இயக்கத் தலைவர்களின் பிறந்தநாள் விழா என்பது கட்சித் தொண்டர்களுக்கு எழுச்சியூட்டும் விழாவாக இருந்தது. ஈ.வெ.ரா., இருந்தபோது தன் பிறந்தநாளை திராவிட இயக்க தொண்டர்கள் கொண்டாடும்படி செய்து, அதை பகுத்தறிவு பிரசாரத்துக்கு பயன்படுத்துவார்.
முதல்வர் கருணாநிதி வரை பிறந்தநாள் விழாக்கள் இதுபோலவே நடந்தன. முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளன்று தி.மு.க.,வின் பொதுக்குழு கூடி, அந்த ஆண்டுக்கான செயல்திட்டங்களை வகுப்பது வழக்கமானதாக இருந்தது.ஆடம்பர, ஆர்ப்பாட்ட அணிவகுப்புகளை விரும்பாத ஸ்டாலின் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டு, ஆடம்பரத்தை தவிர்த்துள்ளார். மக்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தும் எந்த செயலும் தன் பிறந்தநாளில் நடக்கக் கூடாது என அவர் எடுத்த முடிவு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. தமிழக அரசியலில் ஒரு நாகரிகமான நடைமுறையை ஸ்டாலின் உருவாக்கி உள்ளதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.ஸ்டாலின் தன் பிறந்தநாளன்று தன்னை வாழ்த்த வந்தவர்களில் ஏழ்மை நிலையில் இருந்த 25 பேருக்கு வேட்டி, சட்டைகள் வழங்கி, உணவளித்து உபசரித்தார்.லிட்டில் பிளவர் பள்ளியில் பயின்ற மாற்றுத்திறன் பெற்ற மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கி உதவிகள் செய்தார். ஆடம்பரங்கள் தவிர்க்கப்பட்டதால், தமிழகத்தின் பல பகுதிகளில் நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்களுக்கு இளைஞரணியினர் ஏற்பாடு செய்து முன்மாதிரியை இந்த ஆண்டு உருவாக்கினர்.
அதுபோல், அழகிரியும் தென்மண்டல செயலர் பொறுப்பில் இருந்தபடி, கட்சிக்கு உரமேற்றி வருகிறார். இடைத்தேர்தல்களில் தொடர்ந்து பெற்றுவரும் வெற்றி அவருக்கும், கட்சிக்கும் பெரும் செல்வாக்கை பெற்றுத் தந்துள்ளது. ஆளுங்கட்சியைப் பார்த்து எதிர்க்கட்சிகள் சவால் விட்ட நிலை மாறி, தேர்தல் என்றாலே எதிர்க்கட்சிகள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளதற்கு அழகிரியே காரணம். தேர்தலுக்கு தேர்தல் அவரது அணுகுமுறை மெருகேறி வருவதால், "அழகிரி பார்முலா' என்ற புதுப் பெயரே அரசியல் அரங்கில் உருவாகி உள்ளது. அவர்களது தலைமைப் பண்பும் நாளுக்கு நாள் மெருகேறிய வண்ணம் உள்ளது. மதுரை மேலூர் அருகே அட்டப்பட்டியில் சமீபத்தில் சமத்துவபுர திறப்பு விழா நடந்தபோது, துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி இருவருமே பங்கேற்றனர்.
இருவரைப் பற்றியும் பல்வேறு ஹேஷ்யங்கள் வந்த நிலையில், இருவரும் ஒருசேர விழாவில் பங்கேற்றது எதிர்ப்பாளர்களின் புருவங்களை உயரச் செய்துள்ளது.அழகிரி வரும்வரை, மதுரை ரிங் ரோட்டில் 15 நிமிடம் தன் வாகனத்தில் காத்திருந்தார் ஸ்டாலின். அழகிரியின் கார் வந்ததும் அவருடன் சேர்ந்து ஒரே காரில் விழாவுக்குச் சென்றனர். சமத்துவபுரத்தை அழகிரி திறந்து வைத்தார். அரசு "புரோட்டகால்'படி துணை முதல்வர் தான் இறுதியாகப் பேச வேண்டும் என்பதால் அழகிரி பேசியபின், ஸ்டாலின் பேசினார். இச்சம்பவங்கள் அவர்கள் மத்தியில் உள்ள விட்டுக் கொடுக்கும் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஸ்டாலின், அழகிரியின் அணுகுமுறையால் தி.மு.க., நாளுக்கு நாள் பலம் பெற்று வருவதாக அக்கட்சியினர் பெருமையடைந்து வருகின்றனர்.






