மின் உற்பத்தி குறைவால் கிராமங்களில் 4 மணிநேரம் ‘பவர் கட்’ : மேலும் 2 மணி நேரத்தை அதிகரித்தது மின்வாரியம்
சுட்டெரிக்கும் கோடை வெயில் துவங்கி விட்டதால் காற்றாலை, புனல் மின்உற்பத்தி குறைந்துள்ள நிலையில், மின்தேவை அதிகரித்துள்ளது.மின் பற்றாக்குறையை சமாளிக்க மின் வாரியம், கிராமப்புறங்களில் மேலும் 2 மணி நேரம் மின் தடையை அமல் செய்துள்ளது. ஏற்கனவே சென்னை தவிர மற்ற ஊர்களில் தினமும் இரண்டு மணி நேரம் மின் தடை அமலில் உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 214 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். நீர் மற்றும் காற்றாலை மூலம் நிலையான மின் உற்பத்தி செய்ய முடியாது. மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலான நேரத்தில் உச்ச பட்ச மின் தேவை 9,567 மெகா வாட் ஆக உள்ளது. தமிழகத்தின் மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தி அதிகரிக்காததால், மின் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க 2008 செப்., 1 முதல், சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதியில் தினமும் 2 மணி நேர மின் தடையை மின் வாரியம் அமல்படுத்தியது.
நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்கள், "ஏசி', பிரிட்ஜ், மின் விசிறி, ஏர்கூலர் ஆகியவற்றை அதிகம் பயன் படுத்த துவங்கியுள்ளனர். இதனால், மின்நுகர்வு மேலும் அதிகரித்து வருகிறது. அதனால், மாலை 6 முதல் 10 மணி வரையிலான பீக்-அவரில் 1,000 முதல் 1,400 மெகா வாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே நேரம், மொத்தம் 1,985 மெகா வாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய நீர் மின் நிலையங்களில், தற்போது வறட்சி காரணமாக மின் உற்பத்தி 700 மெகா வாட் குறைந் துள்ளது. காற்றாலை மூலம் 4,500 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஜூலையில் தென்மேற்கு பருவக்காற்று கை கொடுத்ததால் 1,500 முதல் 2,100 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியானது. காற்றின் வேகம் குறைந்ததால், தற்போது காற்றாலை மின் உற்பத்தி 10 முதல் 12 மெகா வாட்டாக குறைந்தது. 2,920 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய தமிழக அனல் மின் நிலையங்களில், நேற்றைய நிலவரப்படி 2,350 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது.
தூத்துக்குடியில் 850 மெகா வாட், நிலக்கரி ஸ்டாக் இல்லாததால் தினமும் சரக்கு ரயிலில் வரும் 12 ஆயிரம் டன் நிலக்கரியை கொண்டு 840 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 730 மெகா வாட் மின்சாரம் என, குறைந்த அளவிலேயே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் தட்டுப்பாட்டை சமாளிக்க பல இடங்களில் இரண்டு மணி நேரம் மின் தடை மட்டுமின்றி, பகல் மற்றும் இரவு நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் திடீர், திடீரென கூடுதலாக ஒன்று முதல் இரண்டு மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. கிராமங்களில் விவசாயத்திற்கும், வீட்டு உபயோகத்திற்கும் ஒரே பீடரில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தமின்சாரத்தை இரண்டு மணி நேரம் தடை செய்தால், கூடுதல் மின்சாரம் மிச்சப்படுத்த முடியும் என்பதால், தற்போது நகரங்களை விட கிராமங்களில் கூடுதல் நேரம் மின் தடை செய்யப்படுகிறது. "மின் தட்டுப்பாடு காரணமாக, ஒவ்வொரு துணை மின் நிலையங்களிலும் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணியை கண்டிப் பாக செய்ய வேண்டும்' என, வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணியின் போது, மின் வினியோகம் இருக்காது என்பதால், அதன் மூலம் மிச்சமாகும் மின்சாரம் வேறு பகுதிக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






