ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்
சீயோல்: ஆன்லைனில் தன்னை மறந்து ஆட்டம் போட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு பால், புகட்டாமல் கொன்று விட்டனர். ஆன்லைன் மயக்கம் இந்த அளவுக்கு மோகமாக மாறிப்போனதே என்பது தற்போதைய சமூக ஆர்வலர்களின் கேள்வி. தென்கொரியாவில் இந்த 3 மாத குழந்தை சாவுக்கு காரணமான தாய் - தந்தையரை போலீசார் கைது செய்துள்ளனர். தென் கொரியாவை சேர்ந்த ஒரு தம்பதி இன்டர் நெட்டில் ஆர்வத்துடன் விளையாடும் பழக்கத்தை வைத்திருந்தனர். இவர்களுக்கு 3 மாத குழந்தை இருந்தது. அதுவும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை. தினமும் இவர்கள் இன்டர் நெட் மையத்துக்கு சென்று ஆன் லைனில் விளையாடுது வழக்கம் . விளையாடும் போது தங்களையே மறந்து விடுவார்களாம். சாப்பாடு, தண்ணீர் இன்றி தங்களின் அன்றாட பணிகளை கூட மறந்து விடுவது உண்டு.
தன்னை மறந்தவர் பெற்ற குழந்தையை மறந்து விட்டனர். அக் குழந்தைக்கு பால் கொடுக்காமல் பட்டினி போட்டு வந்தனர். இது அடிக்கடி நடந்து வந்துள்ளது. இதன் காரணமாக அந்த குழந்தை இறந்து விட்டது. இதனால் குழந்தை பால் மற்றும் தண்ணீர் இன்றி நாக்கு வறண்டு, பசியால் இறந்தது. இச்சம்பவம் குறித்து கவிபோன் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் பசி, பட்டினியால் குழந்தை இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தம்பதியினர் கைது செய்யப்பட்டனர் இச்சம்பவம் தென் கொரியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதில் ஒரு ஹைலைட் என்ன தெரியுமா 41 வயது கொண்ட கணவனும், 25 வயது கொண்ட மனைவியும் சாட்டிங் மூலம் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்களாம்.






