இலங்கை மனித உரிமை மீறல் : குழு அமைத்தார் மூன்
நியூயார்க் : இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையின் போது, மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்கள் நடந்ததாக புகார் எழுந்தது. இதில் ஐ.நா.,வின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என, சில நாடுகள் கூறின. ஐ.நா., மனித உரிமைப் பிரிவைச் சேர்ந்த உயரதிகாரி பிலிப் சமீபத்தில் இது தொடர்பாக பேசுகையில், "இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிக்க, ஒரு குழுவை அமைக்க வேண்டும்' என்றார். ஐ.நா., மனித உரிமைப் பிரிவின் மற்றொரு அதிகாரி நவநீதம் பிள்ளையும், இந்த விஷயத்தை வலியுறுத்தினார்.
இந்நிலையில், ஐ.நா., பொதுச் செயலர் பான் -கீ- மூன், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது, மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளதாக அவரிடம் கூறினார். இதுகுறித்து ஐ.நா., செய்தி தொடர்பாளர் மார்டின் நெசிர்கி கூறுகையில், ""இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து, ஆய்வு செய்து அது தொடர்பான ஆலோசனையை பொதுச் செயலருக்கு வழங்குவதற்காக நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது,'' என்றார்.
ராஜபக்ஷே எதிர்ப்பு: ஐ.நா.,வின் இந்த நடவடிக்கைக்கு, இலங்கை அதிபர் ராஜபக்ஷே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,"மனித உரிமை மீறல் குறித்து ஆலோசனை கூறுவதற்காக நிபுணர் குழு அமைக்கும் ஐ.நா.,வின் நடவடிக்கை அவசியமற்றது. இது, இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல். மேற்கத்திய நாடுகள் சிலவற்றில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்திகளின் தூண்டுதலின் பேரில், இலங்கையின் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் செயலும் அதிகரித்துள்ளது' என்றார்.
ராணுவ ஊழல்: இதற்கிடையே, இலங்கையில் சரத் பொன்சேகா ராணுவ தளபதியாக இருந்த போது, பாதுகாப்பு தொடர்பான ஒப்பந் தங்கள் மேற்கொண்டதில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதற்காக சுஜீவா வர்மா என்பவர், சரத் பொன்சேகாவின் உறவினருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாகவும், இலங்கை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே, பணம் கொடுத்த சுஜீவா வர்மா தலைமறைவாகி விட்டதால், அவரை பிடிக்க இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடுமாறு, இலங்கை போலீசாருக்கு அந்நாட்டு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.






