பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக கூச்சல் ; குழப்பம் ; ராஜ்யசபா ஒத்திவைப்பு
புதுடில்லி : லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவுக்கு சமாஜ்வாடி மற்றும் ராஜ்ய ஜனதா தள் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜ்ய சபா 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. மசோதாவுக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இம்மசோதாவை நிறைவேற்றி 13 ஆண்டு கனவை நனவாக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மேலும், சர்வதேச பெண்கள் தினமான இன்று, இம்மசோதா தாக்கல் செய்யப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ராஜ்ய சபா 2 முறை ஒத்திவைப்பு : ராஜ்யசபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு ஒரு புறமும், எதிர்ப்பு ஒரு புறமும் இருந்தது. ராஷ்டிரிய ஜனதாதளம்ல சமாஜ்வாடி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். பா.ஜ., மற்றும் இடதுசாரி, தி,மு,க,, திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவி்த்து கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் நிலவியது. இதனையடுத்து சபையை 12 மணி வரை ஒரு முறையும் பின்னர் 2 மணி வரை ஒரு முறையும் சபாநாயகர் அன்சாரி ஒத்தி வைத்தார்,. தொடர்ந்து. பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சியை சேர்ந்த பெண் எம். பி.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது போல் லோக்சபாவும் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
ஆதரவு வாபஸ் பெறுவோம் என்கிறார் லாலு : சபையை வெளிநடப்பு செய்து விட்டு வெளியே வந்த ராஷ்ட்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் கூறுகையில் : மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் உள் இட ஒதுக்கீடு முக்கியமானது. அப்போது தான் சிறுபான்மை பெண்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்த மகளிர் மசோதா நிறைவேற்ற முயற்சிக்கும் மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கி கொள்வோம்.
பெண்களுக்கு ஆட்சி நிர்வாகத்தில் பங்களிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. இருந்தாலும், இந்தியாவில் பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவியது.முதல் முதலாக, 1996ல் தேவ கவுடா பிரதமராக இருந்தபோது, இந்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அம்முயற்சி நிறைவேறவில்லை.
இந்நிலையில், தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் காய் நகர்த்தியது. ஜனாதிபதி, லோக்சபா சபாநாயகர், ஆளும் கட்சி கூட்டணித் தலைவர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் என, நாட்டின் அதிகார முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் தற்போது பெண்களே உள்ளனர். மசோதாவை நிறைவேற்ற இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது தான் நல்லது என, காங்கிரஸ் முடிவு செய்தது.
இதன்படி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா, சர்வதேச பெண்கள் தினமான இன்று, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ராஜ்யசபாவில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., இந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளதால், காங்கிரஸ் தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது.மசோதா நிறைவேறும்போது, அனைத்து எம்.பி.,க்களும் சபையில் இருந்து, அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும், என, பா.ஜ.,சார்பில் கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இடதுசாரி கட்சிகளும் மசோதாவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
அதே நேரத்தில், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற முக்கிய கட்சிகள், மசோதாவை எதிர்க்கப்போவதாக அறிவித்துள்ளன. "பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்' என்று, இந்தக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இன்னும் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில்,"இந்த மசோதா மிகவும் அபாயகரமானது. தலித், முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள், பார்லிமென்டுக்கு தேர்வு செய்யப்படுவதை தவிர்க்கும் நடவடிக்கை இது' என்றார்.ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் பிரேம் சந்த் குப்தா கூறுகையில்,"ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, எங்கள் எம்.பி.,க்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பர். இதற்கான கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்றார்.மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
ஆதரவு: பெண்கள் மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேறுவதற்கு 156 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில், காங்கிரசுக்கு 71 உறுப்பினர்களும், பா.ஜ.,வுக்கு 45 உறுப்பினர்களும், இடதுசாரி கட்சிகளுக்கு 20 பேரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளனர். இதுதவிர, தேசியவாத காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்கிரஸ், தேசிய மாநாடு உள்ளிட்ட ஆளும் கூட்டணிக் கட்சிகளும், அ.தி.மு.க., - பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் மசோதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளன. இதனால், இந்த மசோதா எளிதில் நிறைவேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.






