நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசிடம் பணம் இல்லை : மாயாவதி அறிவிப்பு
லக்னோ : உத்திர பிரதேச மாநிலம் பிரதாப்கர் ஆசிரமத்தில் பணம் மற்றும் உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 70 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்து போலீஸ் கண்காணிப்பு பகுதிக்கு அருகில் நடந்துள்ளது. சுமார் 15 ஆயிரம் மக்கள் கூடிய இந்நிகழ்ச்சியில், கூட்டத்தை கட்டுப்படுத்த எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படாமல் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் கண்காணிப்பு பகுதிக்கு அருகில் நடந்த இவ்விபத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பது தெரிந்தும் போலீசார் அனைவரையும் ஆசிரமத்திற்குள் அனுமதித்தது ஏன் என ஆசிரம நிர்வாகியான சுவாமி முகுந்தானந்தா கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால் மாயாவதி அரசு, விபத்து நடந்ததற்கு ஆசிரமமே காரணம் என குற்றம் சாட்டி உள்ளது. இதன் அடிப்படையில் ஆசிரமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்திர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை எனவும், விபத்து நடைபெற்ற இடத்தை மாயாவதி நேரில் பார்வையிட வரவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.இது குறித்து உத்திர பிரதேச முதல்வர் மாயாவதியிடம் கேட்டதற்கு, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் அளவிற்கு அரசிடம் தற்போது பணம் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் பல நூறு கோடி ரூபாய் செலவில் சிலைகள் அமைத்த மாயாவதி தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவரது கட்சியின் 25வது ஆண்டு விழா அடுத்த வாரம் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.






