ரத்தம் சொட்ட சொட்ட விரட்டியடிக்கப்பட்ட நித்யானந்தா
பெங்களூரு: தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி பெங்களூரு வந்த நித்யானந்தாவுக்கு முதலில் அடைக்கலம் கொடுத்த ஸ்டூடியோ அதிபரின் குடும்பத்திலேயே குழப்பம் ஏற்படுத்தியதால், ரத்தம் சொட்டச், சொட்ட அடித்து விரட்டப்பட்டார்.
பெங்களூரு ஸ்டூடியோவில் ஆஸ்ரமம் போன்று அமைத்து நித்யானந்தா தங்கியிருந்த நாட்களில், அதிபரின் வளர்ப்பு மகனின் மனைவியின் மீது சாமியார் கண் வைத்தார். நள்ளிரவு பூஜையில் தீர்த்தம் கொடுத்தால், உங்களின் நோய் பறந்து விடும் என்று ஆசை வார்த்தை கூறினார். இந்த தீர்த்தம் எல்லா வினைகளையும் தீர்க்கும் என்றார். இதற்கான நள்ளிரவு பூஜையில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பூஜைகள் நடந்து முடிந்த பின்னர், ஆனந்த நடனம் இடம் பெறும். இதில், ஒருவித போதை மயக்கத்துடன் இசை ஒலிபரப்பப்படும். இதில், ஆண்களும், பெண்களும் கைகோர்த்து நடனமாடுவார்கள். இந்த நடனம் முடிந்த பின்னர், அனைவருக்கும் தீர்த்தம் கொடுக்கப்படும். இந்த தீர்த்தத்தை குடிக்கும் பெண்கள், மயக்கமடைந்து தன்னிலையை இழந்து விடுவார்கள்.அதன் பின்னர் நடப்பது நித்யானந்தாவுக்கு மட்டுமே தெரியும். ஏனெனில், கதை, திரைக்கதை, வசனம், பாடல், நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என அனைத்தும் நித்யானந்தாவே கைவசம் வைத்திருந்ததால், மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.
இங்கு தொடர்ந்து வருபவர்கள் ஓரிரு மாதங்களில் நித்தியானந்தரின் வாடிக்கையாளர்களாகி விடுகின்றனர். கணவரை விட்டு பிரிந்து வரும் பெண்கள் ஏராளம் இடம் பிடித்தனர். இவர்களில் சிலர் கர்ப்பவதியானவர்களும் உண்டு. தங்கள் வாழ்க்கையை இழந்த பின், மீண்டும் குடும்ப வாழ்க்கைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். தங்கள் பெயருடன் "ஆனந்தா' என்ற பெயரை இணைத்து கொண்டு "சன்னியாசினி' ஆகி விடுவார்கள். இந்த இளம் வயது அழகிய சன்னியாசிகளே, நித்யானந்தாவின் கையை பிடிப்பது, காலை அமுக்குவது என "சகல' பணிகளையும் செய்தனர். அதையே தங்கள் "கடமையாக' வும் கருதினர்.
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த நித்யானந்தா, தனக்கு பெங்களூருவில் வாழ்வதற்கு இடமளித்த ஸ்டூடியோ அதிபரின் தலையிலேயே கையை வைத்தார். அவரது ஸ்டூடியோவையே எழுதி வாங்கினார். இந்த உண்மை அவரது வளர்ப்பு மகனுக்கு தெரிய வந்தது. இதனால், நித்யானந்தா ரத்தம் சொட்ட சொட்ட அடித்து விரட்டப்பட்டார். நித்யானந்தாவுக்கு உதவியாக செயல்பட்ட தாடிக்காரர், அவரது மனைவி, அழகிய இளம் சிஷ்யைகளும் இரவோடு இரவாக தலைமறைவானார்கள்.இனிமேல் பெங்களூருவில் இருந்தால் ஆபத்து என்று கூறி, மைசூருவை நோக்கி சாமியார் கும்பல் ஓட்டம் பிடித்தது. ராம்நகர் மாவட்டம் பிடதி என்ற இடத்தில் முக்கிய புள்ளி நித்யானந்தாவிடம் அகப்பட்டார். அவரது மனைவியின் உடல் நலனை குணப்படுத்துவதாக நித்தியானந்தர் கூறினார். இதற்கு பரிசாக அவரது பத்து ஏக்கர் நிலத்தை தனது பெயரில் எழுதி வாங்கிக் கொண்டார். அந்த நிலத்தின் தரைமட்டத்தின் கீழுள்ள பகுதியில், ஆடம்பரமான அழகிய பங்களாவை கட்ட ஆரம்பித்தார். தன் லீலைகளை ஆரம்பிக்க பல வழிகளிலும் திட்டமிட்டார்.
அப்போது, நித்யானந்தா, "போலி சாமியார்' என்ற உண்மை வெளியாக ஆரம்பித்தது. அந்த ஊர் மக்களும், நித்தியானந்தரை விரட்ட திட்டமிட்டனர். இதையடுத்து, நில சொந்தக்காரர், தனது ஆட்களை வைத்து நித்தியானந்தரை விரட்டியடித்தார். பத்து ஏக்கர் நிலம் சம்பந்தமாக பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.எங்கு போனாலும், விரட்டுகிறார்களே என்ற எண்ணத்தில், அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தனது சிஷ்யர்களுடன், நித்தியானந்தர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தான் அண்ணன், தம்பி இருவர் சிக்கினர். தங்களது குடும்ப பிரச்னை, ஆரோக்கிய பிரச்னையை தீர்த்து வைப்பார் என்று கருதி ஒன்று விடாமல் முழுவதும் கூறினர். இதற்கு ஈடாக அண்ணன், தம்பிக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை தனக்கு எழுதி கொடுக்க வேண்டும் என்று நித்தியானந்தர் சத்திய பிரமாணம் பெற்றுக் கொண்டார். அந்த நிலத்தில் ஆலமரம் ஒன்று இருந்தது. இந்த ஆலமரம் தனக்கு எதிர்கால வாழ்க்கை கொடுக்கும் என்று மிகைப்படுத்தி, 600 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது என்று கூறி, மக்களை ஏமாற்றினார். இதையும் உண்மை என பலரும் நம்பினர். இதை வைத்து, அவரும் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார். அண்ணன், தம்பிகளிடம் நிலத்தை எழுதி வாங்கினார். இந்த வகையில், பிடதியில் ஆஸ்ரமம் அமைத்தார்.பிடதியில் அமைக்கப்பட்ட ஆஸ்ரமத்தை அப்போதைய கர்நாடகா முதல்வரை வைத்து திறக்க திட்டமிட்டார். இதற்காக தகவல்கள் பரப்பப்பட்டது.
வழக்கம் போல் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், பண வசதி படைத்தவர்கள் என பலரும் போட்டி போட்டு ஆஸ்ரமத்திற்கான திறப்பு விழா பணிகளில் ஈடுபட்டனர். நித்யானந்தாவின் சிஷ்யர்கள், அவரது புகழை பரப்பினர். நித்யானந்தா தியான பீடத்தை முதல்வர் திறக்கிறார் என்ற தகவல் பத்திரிகை, தொலைகாட்சி மூலம் பரப்பப்படுகிறது. வழக்கம் போல், தகவல்களை அறிந்த மக்களும் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர். நாளுக்கு நாள் பீடத்தின் வருமானம் அதிகரித்தது. படித்த, கவுரவமான குடும்பத்தினரும், அமைச்சர்களின் மனைவிகளும், இளம் பெண்களும், அதிகாரிகளும், மூத்த அரசியல்வாதிகளும் என பலரும் பிடதி ஆஸ்ரமத்திற்கு படையெடுத்தனர்.
கர்நாடகா மூத்த அரசியல்வாதியுடன் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக மிகப்பெரிய பூஜை ஒன்று ஆஸ்ரமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பூஜையில், ஆன்மிக வாதியும், மூத்த அரசியல்வாதியுமான அந்த தலைவர், சாஷ்டாங்கமாக கீழே விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இந்த காட்சி வீடியோ எடுக்கப்பட்டது. பல இடங்களில் பரப்பப்பட்டது. பெரிய, பெரிய தலைவர்களே நித்தியானந்தனை வணங்குகிறார்களே என்று கருதி, பலரும் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர்.பல இடங்களில் ஆஸ்ரம கிளைகளை உருவாக்க திட்டமிடப்பட்டது. பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்ட பலரும் நித்தியானந்தரின் திடீர் சீடர்களாக மாறினர். இவர்கள் தங்களது பெயரின் முன்பு "ஆனந்தா' என்று போட்டுக் கொண்டு, ஆஸ்ரம பொறுப்பாளர்களாக காட்டிக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் இன்று செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.






