பிளஸ் 2 இயற்பியல் பாடத்தில் 262 பேருக்கு இன்று மறுதேர்வு
சென்னை: பிளஸ் 2 இயற்பியல் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 262 மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடக்கிறது.
கடந்த மாதம் 8ம் தேதி முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்களில் 262 மாணவர்களின் இயற்பியல் பாட விடைத்தாள்கள் அடங்கிய கட்டு, காணாமல் போனது. விடைத்தாள்கள் மாயமான விவகாரம் குறித்து, சட்டசபையில் கடந்த 8ம் தேதி பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, விடைத்தாள் கிடைக்கவில்லை என்றால் மறுதேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். அன்று மாலையே, வரும் 22ம் தேதி மறுதேர்வு நடக்கும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 இயற்பியல் மறுதேர்வு நடக்கிறது.
அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதிவெண் 469874 முதல் 469951 வரை (469879 தவிர) இடம் பெற்றுள்ள மாணவர்கள், தண்டலைப் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதிவெண் 469968 முதல் 470052 (470045 தவிர) வரை இடம் பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதிவெண் 470272 முதல் 470375 வரை (470274, 470308, 470342 எண்கள் தவிர்த்து) இடம் பெற்றுள்ள மாணவர்களும் இன்று நடக்கும் மறுதேர்வில் கலந்து கொள்கின்றனர்.
பாதிக்கப்பட்ட 262 மாணவர்கள் 44 நாட்கள் கழித்து மறுதேர்வு எழுதுவதால் கேள்வித்தாளில் உள்ள கேள்விகள் எளிமையாக இருக்கும் என சம்பந்தப்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கேள்வித்தாள் எளிமையாக இருக்குமா? அல்லது வழக்கம் போல இருக்குமா? என்பது தேர்வு முடிந்த பின் தெரியவரும்.






