ஸ்டாலினை சந்தித்த பார்வையற்ற சுரேகா
சென்னை : துணை முதல்வர் ஸ்டாலினை, பார்வையற்ற மாணவி சுரேகா சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: காய்ச்சலுக்கு உட்கொண்ட மாத்திரையால் பார்வையிழந்த மாணவி சுரேகாவின் நிலைமையை நாளிதழ் செய்திகளின் வாயிலாக அறிந்த துணை முதல்வர் ஸ்டாலின், மாணவிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் கிடைக்க ஏற்பாடுகள் செய்தார்.
சுரேகாவுக்கு ஐதராபாத்தில் உள்ள பாஸ்டோன் மருத்துவமனையில் லென்ஸ் பொருத்தப்பட இருப்பதால், அங்கு செல்வதற்கு முன், தனக்கு உதவிக்கரம் நீட்டிய துணை முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்பினார். இதையறிந்த ஸ்டாலின், நேற்று மாலை 5 மணியளவில் மாணவி சுரேகா, அவரது பெற்றோர் தேவேந்திரன், கலாவதி, சகோதரர் நவீன்குமார் ஆகியோரை சந்தித்தார்.
மாணவியின் உடல்நலன், அவருக்கு இதுவரை அளிக்கப்பட்ட சிகிச்சை ஆகியவற்றை கேட்டறிந்த துணை முதல்வர், மேற்கொண்டு நடைபெறவுள்ள சிகிச்சைகள் நல்ல முறையில் நடைபெறும் என நம்பிக்கையும், வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொண்டார். சுரேகாவும், குடும்பத்தினரும் ஐதராபாத் செல்வதற்காக 10 ஆயிரம் ரூபாய் வழங்கிய துணை முதல்வர், மாணவிக்கு பார்வை கிடைப்பதற்கான அனைத்து செலவுகளையும் தானே ஏற்பதாகத் தெரிவித்து, வழியனுப்பி வைத்தார். சந்திப்பின் போது துர்கா ஸ்டாலின், தமிழக அரசின் கூடுதல் குற்றத்துறை வக்கீல் அசன் முகமது ஜின்னா உடனிருந்தனர்.







[...] This post was mentioned on Twitter by Tamil News. Tamil News said: New Blog post ஸ்டாலினை சந்தித்த பார்வையற்ற சுரேகா http://bit.ly/9QD6MJ … [...]