பா.ம.க.,வுக்கு சீட் இப்போது இல்லை : தி.மு.க., செயல்திட்டக் குழு பரபரப்பு
ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க., சார்பில் அன்புமணியை எம்.பி.,யாக்கும் முயற்சியை முறியடிக்கும் வகையில், தி.மு.க.,வின் உயர்நிலை செயல்திட்டக் குழு முடிவு எடுத்தது. பா.ம.க.,வுக்கு இந்த முறை கைவிரித்துள்ள தி.மு.க., அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பின் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடம் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் கூட்டணியில் இருந்தால் தான் இடம் கிடைக்கும் என்ற நிலை பா.ம.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, கூட்டணி மாறுவதற்காக தி.மு.க., அணியில் இருந்து பா.ம.க., வெளியேறியது. அப்போது, அ.தி.மு.க.,வுடன் தொகுதி ஒப்பந்தம் செய்த பா.ம.க., தங்களுக்கு 2010ல் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்தது. ஆனால், லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க., - பா.ம.க., உறவில் விரிசல் ஏற்பட்டதால், ராஜ்யசபா சீட் ஒப்பந்தம் கேள்விக்குறியானது. "திரிசங்கு நிலை'யில் பா.ம.க., இருந்த நிலையில், தமிழகத்தில் காலியாகும் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான மனு தாக்கல் இன்று துவங்குகிறது.
இதில், தி.மு.க.,விற்கு மூன்றும், அ.தி.மு.க.,விற்கு இரண்டும், காங்கிரசுக்கு ஒரு பதவியும் கிடைக்கவுள்ளது.தற்போது பதவி இழக்கும் எம்.பி.,க்களில் பா.ம.க., நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணியும் ஒருவர். இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என தி.மு.க.,விடம், பா.ம.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.சமீபத்தில் நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த பா.ம.க.,வினர், தேர்தல் முடிவிற்கு பிறகு நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், ஆளுங்கட்சியைப் பாராட்டத் துவங்கினர். துணை முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு ஆனதையொட்டி, பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேரடியாக முதல்வரைச் சந்திக்கவில்லை என்பதைத் தவிர, அனைத்து வழிகளிலும் ராஜ்யசபா எம்.பி., பதவியை பெற பா.ம.க., கடும் பிரயத்தனம் செய்தது.
இந்நிலையில், பா.ம.க.,விற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு மற்றும் ராஜ்யசபாவிற்கு வேட்பாளர்கள் தேர்வு செய்வதற்காக தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை கூடியது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்த விவாதத்திற்கு பிறகு, உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், "வரும் 2011 சட்டசபை தேர்தலை அடுத்து வரும் ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.,விற்கு ஒரு இடம் அளிக்கப்படும். இதை பா.ம.க., ஏற்கும் என நம்புகிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டது.இதன் மூலம் தற்போது பா.ம.க.,விற்கு சீட் இல்லை என தி.மு.க., கைவிரித்துள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலின் போது கூட்டணியில் இருந்தால் மட்டுமே, அடுத்து வரும் ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.,வுக்கு இடம் கிடைக்கும் என்ற கட்டாயம் உருவாகியுள்ளது.
பா.ம.க.,வுக்கு மட்டுமன்றி, காங்கிரசும், தி.மு.க., ஆதரவில் இன்னொரு இடத்தை பெறலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தது. அதற்கும் முடிவு கட்டும் வகையில், ராஜ்யசபாவிற்கு செல்லும் தி.மு.க., வேட்பாளர்கள் மூன்று பேரது பெயரும் கூட்ட முடிவில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இப்போதைய ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க., இடம்பெற வாய்ப்பில்லை.
ராஜ்யசபா செல்பவர்கள்... : தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழுவில், ராஜ்யசபா வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தி.மு.க., விவசாயிகள் அணிச் செயலர் கே.பி.ராமலிங்கம், அ.தி.மு.க.,வில் இருந்து சமீபத்தில் தி.மு.க.,விற்கு வந்த சேலம் செல்வகணபதி, சங்கரன்கோவில் தங்கவேலு ஆகிய மூவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ராமலிங்கம், செல்வகணபதி ஆகியோர் அ.தி.மு.க.,வில் இருந்தும், தங்கவேலு ம.தி.மு.க.,விற்கும் சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






