“லேடீஸ் ஹாஸ்டல்’ நகை கொள்ளையில் பட்டதாரி மசாஜ் பெண் காதலருடன் கைது
நொளம்பூர்: சென்னை நகரில் பெண்கள் விடுதியில் தங்கும் பெண்களுக்கு, ஆயில் மசாஜ் செய்து நகை, மொபைல் போன்கள், லேப்-டாப் ஆகியவற்றை கொள்ளையடித்த பட்டதாரி பெண், காதலருடன் சிக்கியதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் ரேணுகா மைதிலி(25). இவருக்கு, நூர்ஜகான், தமிழ்ச்செல்வி, சித்ரா என்ற பெயர்களும் உண்டு. சென்னை நகர் மற்றும் புறநகரில் உள்ள "லேடீஸ் ஹாஸ்டல்களில்' தங்கி, உடன் தங்கும் பெண்களுக்கு ஆயில் மசாஜ் செய்வார். மசாஜ் செய்து கொண்ட பெண் குளிக்கச் செல்லும் போது, அப்பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து வந்தார். இது பற்றிய புகார்கள் அதிகளவில் குவிந்தன. ஆயில் மசாஜ் அழகியை கைது செய்ய, மத்திய சென்னை இணை கமிஷனர் தாமரைக்கண்ணன் உத்தரவிட்டார். அண்ணாநகர் துணை கமிஷனர் பன்னீர்செல்வம், திருமங்கலம் உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு, நொளம்பூர் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., சங்கர், காவலர்கள் புவனேஸ்வரி, குபேந்திரன், ரவிச்சந்திரன், அய்யனார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ஏதாவது ஒரு லேடீஸ் ஹாஸ்டலுக்கு செல்லும் ரேணுகா மைதிலி,"வெளியூரில் இருந்து வேலைக்காக இன்டர்வியூவில் பங்கேற்க வந்திருப்பதாக' கூறி இரண்டு மற்றும் மூன்று பெண்கள் உள்ள அறையில் தங்கி வந்தார். பி.எஸ்.சி., பட்டதாரியான ரேணுகாமைதிலி, உடன் தங்கியுள்ள பெண்களிடம் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி, அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். பிறகு, அப்பெண்களின் தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்துள்ளார். மசாஜ் முடிந்ததும் நகை மற்றும் மோதிரத்தை கழற்றி வைத்து விட்டு, குளித்து விட்டு வருமாறு கூறுவார். பாத்ரூமிற்குள் சென்றவுடன், வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு, நகை மற்றும் மொபைல் போன், லேப்-டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விடுவார். நொளம்பூர் ஜஸ்வந்த்நகரில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி, பெண்களுக்கு ஆயில் மசாஜ் செய்து, 10 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றார். தனிப்படை போலீசாரின் விசாரணையில் ரேணுகாமைதிலி சிக்கினார். அவரது காதலர் ஆனந்த்(24) கைது செய்யப்பட்டார். கொள்ளையடித்த நகை மற்றும் மொபைல் போன்களை மீட்டனர்.
கைதான மசாஜ் அழகி ரேணுகா மைதிலி போலீசாரிடம் கூறியதாவது: சிறிய வயதிலேயே, எனது பெற்றோர் இறந்து விட்டனர். பாட்டி தான் வளர்த்தார். திருமணமாகாத பெண்களுக்கு வரன் அமைத்து கொடுத்து, அதில் கிடைத்த கமிஷன் தொகையில் வாழ்ந்து வந்தேன். தனியார் மொபைல் போன் நிறுவனத்தில் வேலை பார்த்த போது, ஆவடி காமராஜ் நகரை சேர்ந்த ஆனந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. "லேடீஸ் ஹாஸ்டல்' நுழைவு வாயில் வரை ஆனந்த் உடன் வருவார். ஆரம்பத்தில், உடன் தங்கும் பெண்களின் மொபைல் போன்களை மட்டுமே திருடி வந்தேன். பிறகு, பணத்தேவை அதிகரித்ததால் நகை மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் திருடினேன். சென்னையில், பள்ளிக்கரணை, சூளைமேடு, திருமங்கலம்,வடபழனி உட்பட பல இடங்களில் உள்ள "லேடீஸ் ஹாஸ்டலில்' தங்கி திருடியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.






