Mar 22, 2023
வர்த்தகம்

அடுத்தடுத்து மரண அடி அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.7.5 லட்சம் கோடி சரிவு

மும்பை: அதானி நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு, நேற்றைய பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவுடன் சேர்த்து ரூ.7.5 லட்சம் கோடி சரிந்தது. இதன் மூலம் அதானி சொத்து மதிப்பு ரூ.3.28 லட்சம் கோடி குறைந்துள்ளது.   ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இருந்தே, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.  இதைத்தொடர்ந்து, கிரெடிட் சூயிஸ் நிறுவனம், கடன்களுக்கான அடமானமாக, அதானி நிறுவனங்களின் பத்திரத்தை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளது. மேலும், பார்க்லேஸ் உள்ளிட்ட வங்கிகள், கடன்களுக்கு ஈடாக அதானி நிறுவன பங்குகளை கூடுதலாக கேட்டிருந்தன.

இதனால், பங்குச்சந்தையின் நேற்றைய வர்த்தகத்தில் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவைச் சந்தித்தன.  தொடர்ந்து 5 நாட்களில், பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு மொத்தம் ரூ.7.5 லட்சம் கோடி அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. அதாவது, மொத்த பங்கு மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு சரிந்து விட்டது. மேலும், அதானியின் சொத்து மதிப்பு ரூ.3.28 லட்சம் கோடி குறைந்துள்ளது. இதனால், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை விட பின்தங்கி, 15 வது இடத்துக்கு  அதானி தள்ளப்பட்டுள்ளார். போர்ப்ஸ் பட்டியலின்படி இவரது சொத்து மதிப்பு ரூ.6.15 லட்சம் கோடியாகவும், அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.6.86 லட்சம் கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.  இதனால், கடந்த ஆண்டில் அதிக அளவு வருவாய் ஈட்டியவராக இருந்த அதானி, இந்த ஆண்டு அதிக அளவு இழப்பை சந்தித்தவராகியுள்ளார்.