Mar 30, 2023
ஆரோக்கிய வாழ்வு

ரத்தத்தை சுத்தமாக்க எளிய 7 வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மனித உடலில் ரத்தம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ரத்தம் அசுத்தம் அடைந்தால் உடலில் பலவிதமான நோய்கள் உருவாகக் காரணமாகிறது. அது தொடரும்போது உயிரிழப்புக் கூட நேரிட வாய்ப்புள்ளது.  அதுபோன்று, நமது உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகவும், ரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை விகிதம் சரியானதாகவும் இருந்தால்தான் உடல் நோயின்றி வாழமுடியும்.  இதற்கு உணவு முறைகள் மிகவும் அவசியமாகும். எனவே, சுலபமாக ரத்தத்தை சுத்தமாக்கும் வழிகள் சிலவற்றைப் பார்ப்போம்:

ரத்தம்  சக்திமிகு  திரவமாக  இருக்க  முங்கைக் கீரை,  மணத்தக்காளி  கீரை,  பொன்னாங்கண்ணி  கீரை,  வாழைப்பூ, நாவல்  பழம், உலர்ந்த  திராட்சை,  முளைக்கட்டிய  தானியங்கள்  ஆகியவை  அடிக்கடி  உணவில்  சேர்த்து வர,  ரத்தம் சுத்தம் ஆவதோடு, அதிகரிக்கவும் செய்யும். புளிச்சக்கீரையை  துவையலாக  செய்து சாப்பிட்டு  வர ரத்தத்தை  சுத்தப்படுத்தி  அணுக்களின்  எண்ணிக்கையை  அதிகரிக்க  செய்யும்.

இஞ்சியை  நன்றாக  இடித்து சாறு  எடுத்து அதனுடன்  தேன் கலந்து  தினமும்  சாப்பிட்டு வர  ரத்தத்தை  சுத்தமாக்குவதுடன்  ரத்த அணுக்களையும் அதிகரிக்கும்.

இலந்தைப் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தை சுத்தப்படுத்தும்.தினமும் உணவில்  பூண்டு சேர்த்து வர, ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் , பூண்டு  ரத்த ஓட்டத்தை  சீராக்கி  உடலுக்கு  புத்துணர்வை  கொடுக்கிறது.  

மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், ரத்தம் உறைவது தடுக்கப்படுவதோடு, உடலில் ரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படும். மேலும் மஞ்சள் ரத்தத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலையும் சுத்தமாக்கும்.

கடுக்காய்ப்பொடி 5 கிராம்,  கிராம்பு  பொடி  4  கிராம்  இரண்டையும்  சேர்த்து  100  மிலி   தண்ணீரில்  கொதிக்க  வைத்து பிறகு  வடிகட்டி  சிறிதளவு  நெய்  சேர்த்து காலையில்  வெறும்  வயிற்றில்  கொடுக்க  2,3  தடவை  பேதியாகும்.  இது போல்  வாரம்  ஒருமுறை  அல்லது  அவ்வப்போது  செய்து வர  ரத்தத்தை  தூய்மையாக்கும்.

தொகுப்பு : கவிதா பாலாஜி