Mar 30, 2023
தமிழகம்

திருவண்ணாமலையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசான்ய குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ஈசான்ய குளத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று  ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, தைப்பூச நட்சத்திரம் நேற்று காலை 10.41 மணிக்கு தொடங்கியதால், அண்ணாமலையார் கோயிலில் நேற்று தைப்பூச தீர்த்தவாரி நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
அதைத்தொடர்ந்து, காலை 11.30 மணி அளவில் கிரிவலப்பாதையில் உள்ள ஈசான்ய குளத்தில் நடந்த தீர்த்தவாரிக்காக கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடந்தது. அப்ேபாது, தவில், நாதஸ்வரம் இசை முழங்க வீதிவலம் வந்து ஈசான்ய குளக்கரையில் சந்திரசேகரர் வடிவாக அண்ணாமலையார் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து, ஈசான்ய குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது.

அதைத்தொடர்ந்து, தீர்த்தவாரி முடிந்ததும் ஈசான்ய குளத்தில் இருந்து கோயிலுக்கு சுவாமி திரும்பினார். அப்போது, அண்ணாமலையாரையே தம்முடைய மகனாக பாவித்து வழிபட்ட, அண்ணாமலையார் திருக்கோயில் திருப்பணியை நிறைவேற்றிய வல்லாள மகாராஜா இறந்த செய்தியை, ஓலைச்சுவடியில் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதைத்தொடர்ந்து, சுவாமி புறப்பாடு நிகழ்வில், நாதஸ்வர, தவில் இசை நிறுத்தப்பட்டது. பின்னர், எவ்வித ஆரவாரமும் இல்லாமல் அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி சென்றடைந்தார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, வரும் மாசி மகத்தன்று, பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் வல்லாள மகாராஜாவுக்கு நடைபெறும் திதி மற்றும் தீர்த்தவாரியில் சந்திரசேகரர் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.